பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

39


தொடங்கி என் பெயரை அவர் விரும்பியாறே அமைத்துக் கொண்டேன். அவர் என்னை அழைக்கும் பொழுதெல்லாம் 'ஐயங்கார்' என்றே அழைத்து அதனை ஆட்சி பெறச் செய்தார்.

பின்னர் நான் 1936ஆம் ஆண்டே வித்துவான் இறுதி நிலைத் தேர்வு எழுத விரும்பி, அதனைப் பிள்ளையவர்களிடம் கூறி அனுமதியும் ஆசியும் வேண்டினேன் அவர், ‘ஏன், இன்னும் ஓராண்டு பொறுத்திருக்கலாகாதா? அடுத்த ஆண்டு, தேர்வு எழுதுவீரானால் முதல் வகுப்பில் தேறி அதற்குரிய பரிசு பெறும் வாய்ப்பும் கிடைக்கும்’ என்றார். அப்பொழுது என் குடும்பநிலை அதற்கு இடந்தருவதாக இல்லாததை எடுத்துக்கூறி, 'நான் மூன்றாம் வகுப்பில் தேறினால் போதும், அன்பு கூர்ந்து அனுமதி தாருங்கள்.' என்று வேண்டிக் கொண்டேன். அவர் என் நிலைக்கு இரங்கி, 'அப்படியானால் சரி. இந்த ஆண்டே எழுதினாலும் முதல் வகுப்பில் தேறும் தகுதி உங்களுக்கு உள்ளது. கட்டணம் செலுத்தி விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்' என்று ஆசி கூறி அனுமதியளித்தார். அவ்வாண்டே தேர்வு முடிவும் தினத்தாள்களில் வெளிவந்தது. நான் முதல் இரு வகுப்புகளில் எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஆகவே, மூன்றாம் வகுப்பில் தேறியவர்கள் வரிசையை மட்டும் பார்த்தேன் அதில் என் பதிவெண் இடம் பெறவில்லை. எனவே, தேர்வு பெறவில்லை என்று தீர்மானித்துக் கொண்டேன். அன்று மாலை சிறிது வருத்தத்தோடு பிள்ளையவர்கள் இல்லத்திற்குச் சென்றேன். என்னைக் கண்டதும் அவர் மிக்க மகிழ்ச்சியோடு, வாருங்கள். உங்களைத்தான் எதிர்பார்த்திருக்கிறேன். தங்களுக்கு என் பாராட்டுக்கள். இனிப்பு எங்கே? வெறுங்கையோடு வந்திருக்கிறீர்களே, என்ன? என்றார். அவர் கூற்று என்னைத் திகைப்புறச் செய்தது. நாணத்தால் நாக்குழற 'நான் தேர்வு பெறவில்லை. உங்கள் சொல்லைக் கேளாததன் விளைவு என்றேன். 'தேர்வு பெறவில்லையா? யார் சொன்னார்?’ என்று கூறியவாறே உள்ளே சென்று இந்து பத்திரிகையை எடுத்து வந்து முதல் வகுப்பில் தேறினவர்களின் வரிசையில் இரண்டாவதாக இடம் பெற்றிருந்த என் பதிவெண்ணைச் சுட்டிக்காட்டி, ‘இது உங்கள் எண்தானே? மறந்து விட்டீர்களா?' என்றார். நான் வியப்பினால் விம்மிதமுற்றேனெனினும், தவற்றுக்கு நாணினேனாய், 'நான் மூன்றாம் வகுப்பையே எதிர்பார்த்தேன், அதனால் பிற வகுப்புகளின்