பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

275


வகுத்துக்கொள்ளப்பட்ட தொன்றே தவிர, அறிவியல் ஆராய்ச்சியால் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றன்று எனவும் காண்டு (Kant) என்பவர் கூறுகின்றார். காந்தே (Conte) என்பார் வேறு வகையில் தமது நாவன்மையைச் செலுத்தி இந்த முடிவுக்கே வந்துசேர்ந்தார்.

இவர்தம் கொள்கைகளுள் காண்டென்பாரைப் பின்பற்றி ஜெர்மனி நாட்டில் பால்சென் (Paulsen) வைசிங்கர் (Vaishinger) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில், ரினோவியர் (Removier) முதலியோரும், அமெரிக்காவில் லியோன் பிரன்சிக் (Prof Leon Brunschvieg) முதலியோரும், காந்தேயைப் பின்பற்றி இங்கிலாந்தில் ஜான் ஸ்டுவர்ட்மில் (John Stuart Mill) ஹெர்பர்ட் ஸ்பென்சர் (Herbart Spencer) முதலியோரும், பிரெஞ்சு நாட்டில் எமில் லித்ரே ("Emile Littre") எமில் டர்க்கீம் ("Emile Durkheim") முதலியோரும் நாட்டிற் பரப்பலுற்றனர்.

புதுமையில் மக்கட்கு விழைவும் வியப்பும் உண்டாதல் இயல்பு. விஞ்ஞானிகள் இங்ஙனம் புது முறையில் தமது பேச்சு வன்மையும் எழுத்து வன்மையும் கூட்டிக் கடவுட் கொள்கையைத் தாக்கத் தொடங்கியதும், விஞ்ஞானம் காட்டும் புதுமைகள் கண்டு வியப்பால் விழுங்கப்பட்டுக்கிடந்த மக்களது உள்ளம் நிலைகலங்கிற்று. விஞ்ஞானத் துறையின் நோக்கத்தை நுணுகிக் காணும் திறம் இழந்தவர். அவர் கொள்கைகட்கு இரையாயினர். உலகியற் பொருள்களின் ஆக்கக் கூறுகளும், அவை, தம்மில் இயைந்து அமைந்திருக்கும் அமைதியும், அவற்றின் ஊடே நிலவும் ஒழுங்கும் கண்டு எப்படி யமைந்துள்ளன என்று கண்டறிவதே விஞ்ஞானத்தின் முழுத்த நோக்கமாகும். பொருள்களின் தோற்றம், நிலை, கேடு ஆகியன உண்டாதல் எங்ஙனம் என்று கண்டு, அவை ஏன் அங்ஙனமாயின என்று காணாது போதலால், விஞ்ஞானத்தாற்பெறும் உலகியலறிவு முழுத்த அறிவாகாதென்பதை மக்கள் அறிந்திலர். பொருள்களின் ஆக்க அமைதிகளை ஆராயுங்கால் புதிய புதிய அறிவும் அவ்வழி அவற்றால் உண்டாகும் இன்பமும் அவரது ஆராய்ச்சியறிவை மழுப்பி விடுவதால், விஞ்ஞான அறிவு ஒருமருங்கு பற்றியதாக இருத்தலை விஞ்ஞானிகள் தாமும் அறியாதொழிகின்றனர். மேலும் அவர்கட்குக் கடவுளாகிய செம்பொருள் விஞ்ஞான நெறியில் ஆராயத்தக்க பொருளாக இல்லை. விஞ்ஞான நெறியிற் காணப்படும் பொருளின்கண் ஊடுருவி நிற்கும் இயற்கையே முழுமுதலாகிறது. அதனைக்-