பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140சீவக சிந்தாமணி



“செப்படி வித்தை”

“காந்தருவ தத்தை ?”

“அவர்கள்தாம் நீ இருக்குமிடம் காட்டினார்கள்” என்றான்.

தம்பியைக் கண்டு இராசமாபுரத்தையே கண்ட மகிழ்ச்சியை அடைந்தான். பெற்றோர்களைப் பற்றி விசாரித்தான். கந்துக்கடனும் சுநந்தையும் அடைந்த வருத்தம்; அதன் திருத்தம் இவைபற்றிப் பேசினான்.

“குணமாலை?”

“நாள் ஒற்றி அவள் விரல்கள் தேய்ந்து விட்டன. தினந்தோறும் சுவரில் தன் விரலில் மைதீட்டி அதில் ஒற்றி நாள் எண்ணுவாள்” என்றான்.

பால்காரி சாணம் கொண்டு பால் கணக்கு எழுதுவது போல் இருந்தது.

“காந்தருவ தத்தை ?”

“அவர்கள் கலங்குவதில்லை; கேட்டால் நெஞ்சத்தில் எம் காதலர் துலங்குகிறார் என்கிறார்”.

“அது எப்படி உனக்குத் தெரியும்?”

“சூடாக எது கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள். என் நெஞ்சில் அவர் இருக்கிறார் சூடு படக்கூடாது என்று கூறுவாள்” என்றான்.

அவள் ஒரு முடங்கலை எழுதி அனுப்பி இருந்தாள்; அதை அவன் தனித்து இருந்து படிக்கத் தொடங்கினான்.

“அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன். வடியாக் கிளவி மனம் கொளல் வேண்டும்.”