பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

95


முற்றும் வேறு குழப்பமின்றி யொழிய யாண்டும் அமைதியே தலைசிறந்து நின்றது.

வெள்ளி முளைப்ப, விடியல் வந்தது; தாமரையிற் றுஞ்சிய காமர் வண்டினம், கட்கமழும் நெய்தலுக்குச் சென்று, தாதுதிப் பின்னர், கண்போல் மலர்ந்த காமர்சுனைமலரை யடைந்து ஒலி செய்யா நிற்ப, முன்னாள் நிகழ்ந்த குழப்பத்தில் ஈடுபட்ட ஈக்கள் மட்டில் ஒருங்கு கூடி மீட்டும் தம் நிலைமையையும், அதற்கேற்ற முறைகளையும் பன்னிப்பன்னிப் பேசத்தொடங்கின. வேறு சில, கூடுகளில், அரசியர் ஏவிய பணிகளை இனிது செய்து வந்தவை, இக்குழப்பத்தைப் பற்றியேனும், அதனிடையே நிகழும் விரிவுரைகளையேனும் ஒரு பொருளாக நினையாது தம் தொழிலிலே தம் கருத்தைச் செலுத்தி நின்றன. நிற்க, குழப்பத்திற் கலந்த ஈக்குழாத்தினிடை நிகழ்ச்சிகள் பல நிகழ, முதிரா ஈக்களிற் சில முனிவு மீதுாரக் கொண்டு, அதனால் தம்மையும், தம் மனத்திண்மையையும் இழந்து, பெருங்கலக்கத்தை விளைவிக் கும் நிலைமையெய்தின. அதுபோது, இக்குழப்பத்திற்கு முதற்காரணமாகவிருந்த ஈ அவற்றின் முன்னர், "அன்பர்களே! நீங்கள் கைக்கொண்ட இயக்கம் நன்மை பயக்கக் கூடியதே. எனினும், இடையிலிருக்கும் ஒரு பொருளை நீங்கள் எண்ணாது போய்விட்டீர்களே! அப்பொருள் தான் எதுவெனின், நீங்கள் அனைவரும் முதிர்ந்துவிட்டமையன்றோ? நான் முதிர்ந்த உங்களை எவ்வாறு இனி அரச ஈக்களாக மாற்றுவது, கூடாதன்றோ. ஆயினும், நாம்கொண்ட இயக்கத்தின் வெற்றிக் கடையாளமாக யாதானுமொரு புதிய முடிபை எய்துதல் வேண்டும். என் அறிவிற்கெட்டிய முடிபொன்றைக் கூறுகிறேன் கேளுங்கள். பிறகு உங்கள் விருப்பம்போற் செய்யுங்கள்" என்றது. உடனே, அவ்வீக்களனைத்தும் ஒருபடியாக நீ கூறுகின்றவற்றை யாங்கள் மிக்க விருப்புடன் ஏற்றுக் கொள்ளுகிறோம். சொல்லியருள்க" எனப் பேரொலியிட்டுக் கூறின. கூறலும், அது புன்னகை தவழும் இன்முகங்கொண்டு, "அன்பர்களே! நாளின் முதிர்ந்த நமக்கு இனி அரசியர் வேண்டுவதில்லை. நாம் அனைவரும் இன்றிருப்பது போலவே தொழிலீக்களாகவே யிருப்போம்; நாம் இனி ஒருவருக்கு அடிமைப்பட்டு அவர்கள் காலாலிடும் ஏவலைத் தலையாற் செய்தல் வேண்டா. நாமார்க்கும் குடியல்லோம்! நலமே