பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வெளியிட்ட தமிழ் நூல்களைக் கற்று விளங்கித் தெளிவு பெறும் அறிவுடைமையும் தமிழகத்தில் முறையாக அமையவில்லை. இந்நிலையில் அறிஞர் எழுதல் ஒரு சுமை, பதிப்பது ஒரு சுமையாகும். விளங்கிப் பயில்வோருக்காக எளிமை எள்ளல்கள் பெருகி வரும் நிலையையும் நான் காண்கிறேன். வாழ்வில் வறுமையில் வருந்திப் பின்னர் முதுமையில் பெருமை பெற்றதாகப் பேசி, இலக்கியப் பரிசிலைக் காட்டி என் குடும்பத்தார் நாட்டுடைமைப் பலன் பெற விழைவதும் நகைப்பிற்குரியதாகும். வளம் தேடியபோது வாய்க்காததை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லை. எழுதுவதொன்றே என் கடன். எவரேனும் எந்நாளேனும் படித்துப் பயன்பெற்றால் நலமாகும் என்ற நிறைவோடுதான் இலக்கியப் பணியில் வாழ்கிறேன்” என்று உரைவேந்தர் ஒளவை அவர்கள் அந்நாளில் ஆற்றிய உரைத் துணுக்கை இங்கே இணைப்பது தக்கதென்று கருதுகிறேன். எழுத்துச்செம்மல் திரு. பி.வி. கிரியின் சோர்விலாத உழைப்புக்கும் இக்கருத்து பொருந்துவதாகும்.

இந்நூலில் மலர்ந்துள்ள 'உலக வரலாறு' என்னும் கட்டுரை, அறிவியல் நோக்கில் ஆராயப்படுகின்றது. இன்றைய நிலையில் அவை பழங்கருத்துக்களாகவே அமையும். ஊழ், வெல்லத்தக்கதே என்று 'ஊழ்வினை' கட்டுரையில் உறுதிப்படுத்துகின்றார். எனினும் அறுபதாண்டுக்கு முன்னர் ஒளவை அவர்களுக்கிருந்த அறிவியல் நாட்டமும், ஆங்கிலப் பயிற்சியும் நினைக்கத்தக்கன. 'சங்ககாலத் தமிழ்மகன்,' தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்ந்தவன் என்றும், பழந்தமிழ் மகளிரின் பெருமையினைத் 'தமிழ் மகளிர்' என்ற கட்டுரையில் திண்ணிய சான்றுகளுடன் வரைந்துள்ளார்.

ஏட்டில் இல்லாத இலக்கியம், எது? அதுதான் பழமொழிகள். இந்தக் கட்டுரை, இதுவரை சில பழமொழிகள் குறித்துத் தவறாகத் தெரிந்ததை மாற்றித் தெளிவூட்டுகின்றன. வாணிகம் செழிக்க வேண்டுமானால், நான்கு மந்திரங்களைக் கடைப்பிடித்தாலே போதும் என்று கூறி, அந்த நான்கு மந்திரங்களை நம் மனத்திலே பதிய வைத்துள்ளார்.

14