பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

செம்மொழிப் புதையல்


நிற்க, இதனை யீண்டு உரைத்துக்கொண்டே செல்லின் பெருகும்.

திருவருள் கைகூட்டுமாற்றினை வாழ்க்கைமுகத்தான் உணர்த்த வுணர்ந்த பறவைக்குஞ்சுகள், இன்பவுலகையெண்ணித் தாமும் பேரறம் நேர்ந்து, அப் பேருலகினை யடைதல் வேண்டி முடித்தனவாக, பலவும் பலவேறு நெறியிற் படர்ந்து சென்றன. அவை யாண்டுச் செல்கின்றன வென்றேனும், ஏன் செல்லுகின்றன வென்றேனும் ஒருவரேனும் கட்டுரைத்தல் கூடாது. கனவிற் கண்டன வொப்ப, தம் தாய்நினைவும், தம் பண்டைக் கூட்டி னுறைவும் பின்னர் அவற்றின் புலத்துத் தோன்றலும் மறைதலுமாயின. பெற்றதுகொண்டு பேரின்பந் துய்க்குங் காலத்துத் தம் தாய்நினைவு தோன்றிச் சிறிது மயக்கலும், அவை பின்னர்த் தெளிதலும் ஆய இன்னோரன்ன பல நிகழுங்காலத்து, ஒன்று கூறியது, ‘இதனினும் சிறந்ததோர் இன்பவுலகாதல் வேண்டும் நம் தாய் படர்ந்த வுலகம். அன்னதேயாக, அங்ஙனம் நம் தாய் கூறியதும் உண்மையே போலும்” என்பது.