பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

115


ஆ, இதோ இச்சான்றோரும் நம்முடன் வந்து அவன் சொல்லிக் கொள்வதைக் கேட்டு மகிழ்கின்றார். இவர் என்ன சொல்லுகின்றார் பார்ப்போம்.

சான்றோர்:- இவ்வில்வீரன் செய்த முடிவே சிறந்தது. இவன் இம் முடிவிற்கு வரக் காரணம் யாது? இத் தோழியின் நல்லுரையன்றோ? இவளது அறிவுடைமையை என்னென்பேன், இத்தலை மகன் சிறைப்புறம் நிற்பதை யுணர்ந்து அவன் இம் முடிபு செய்யுமாறு பேசிவிட்டாள். அதுமட்டோ, தலைமகட்கும் ஓராற்றால் தேறுதல் கூறிவிட்டாள். கற்புடை மகளிர் கணவனையல்லது பிற தெய்வங்களையும் மனத்தாலும் நினையார். வேலன் முருகன் அணங்கினான் என்றவழி, தலை மகள் அம் முருகனை வணங்கல் வேண்டிவரும். அஃது அவள் கற்பு நெறிக்கு மாறாகும். அதனின்றும் இவள் அவளைத் தப்புவித்துவிட்டாள். வெறியும் விலக்கியாகி விடுகிறது. நல்லது, நாம் இன்று இங்கே வந்ததும் நன்றே யாயிற்று. இவளது செய்கை ஏனைமகளிர்க்கு நன்னெறி காட்டும் நயமுடையது. ஆகவே, இதனைப் பாட்டிடை வைத்துத் தமிழுலகில் நிறுவுவேன்.”

சான்றோர், தம் உடைமடிப்பில் இருந்து ஓர் ஓலை நறுக்கும் எழுத்தாணியும் எடுக்கின்றார், மரத்தடியில் அமர்ந்து. தாம் கருதியதனை எழுதுகின்றார். இவர் எழுதிக் கொண்டிருக்கட்டும். நாம் அம்மகளிர் இருக்குமிடம் செல்வோம்.

தோழி :- அதுமட்டுமா, நம் தாயும் நமக்கும் தலைமகனுக்கும் உண்டாகிய தொடர்பை யறிந்து கொள்வாள். பின்பு, நம் கற்பு நெறிக்கும் இழுக்கு உண்டாகாதே.

மெல்லி :- தோழி, நீ செய்வது நன்றே. இப்போதே விரைந்து சென்று அதனைச் செய்.

தோழி :-நன்று. அவ்வாறே செய்கின்றேன். (போதல்)

மெல்லியலும் தன் நல்லகம் புகுகின்றாள்; தோழியும் கண்மறைவில் சென்றுவிட்டாள். இச்சான்றோர் தாம் எழுதியதை முடித்துக் கொண்டு படிக்கின்றார்; அதனைக் கேட்போம்;