பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

செம்மொழிப் புதையல்


களும் ஒருவராவர். அவர் செய்யுள் இயற்றுவதில் ஆர்வம் கொண்டிலர். அதனால் அவர் செய்யுள் நூல் ஏதும் இயற்றவில்லை. ஆனால், அவர் அவ்வப்பொழுது புனைந்த பாடல்கள் பல உண்டு. அவை யாப்பமைப்பிலும், சொல் நலம், பொருள் வளம், ஓசை நயங்களிலும் சங்கச் சான்றோர், இளங்கோவடிகள், திருத்தக்க தேவர் ஆகிய பழந்தமிழ்ப் பாவலர்களின் பாடல்களை நினைப்பூட்டும் சிறப்பினவாகும். பிள்ளையவர்கள் உரைநடை நூல்கள் இயற்றுவதிலேயே பெரிதும் ஈடுபாடுடையவர். அவர் தமக்கென்று தனி உரைநடை ஒன்றை இனிது அமைத்துக் கொண்டார். அது சொல் அழுத்தமும், பொருள் அழகும், மிடுக்கும் பெருமிதமும் வாய்ந்தது. கதைகள், பாட நூல்கள், எளிய இலக்கியத் திறனாய்வுகள், புதினங்கள் போன்றவற்றை எழுதுவதில் அவர் பொழுதைப் போக்கவில்லை. அருந்தமிழ்ப் புலவர்களும் தனித் தமிழ் மாணவர்களும் படித்துப் பயன் கொள்ளத் தக்க இலக்கிய, இலக்கண, சமய வரலாற்று ஆராய்ச்சி நூல்கள் ஆக்குவதையே நோக்கமாகக் கொண்டார். இவ் வகைகளில் அவர் படைத்துத் தந்துள்ள பயன்கெழு நூல்கள் பலவாகும். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, சூளாமணி ஆகிய பேரிலக்கியங்கள் பற்றி அவர் எழுதியுள்ள சீரிய நூல்கள் அவரது இலக்கிய ஆராய்ச்சியை எடுத்துக் காட்டுவன. திருவள்ளுவர், சேரமன்னர் வரலாறு, வரலாற்றுக் காட்சிகள் . முதலியவற்றில், வரலாற்றுத் துறையில் அவரது ஆராய்ச்சியின் அகலத்தையும் ஆழத்தையும் அளந்தறியலாம். மத்தவிலாசப் பிரகசனம் இவரது மொழிபெயர்ப்புத் திறனுக்கு விழுமிய சான்று. இவையே அன்றி, அவர் இயற்றிய இலக்கண சமய ஆராய்ச்சி நூல்கள் இன்னும் பலவாம். அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் அடங்கிய களம், பல்வேறு தமிழ் இதழ்களில் அவ்வப்பொழுது வரைந்து வெளியிட்ட கட்டுரைகள், ஆய்வுரைகள், மறுப்புரைகள் எண்ணில.

உரையாசிரியர்

பிள்ளையவர்கள் பழந்தமிழ்ப் பேரிலக்கியங்கள் பலவற்றிற்கும் யசோதர காவியம், மணிமேகலை ஆகிய காப்பியங் கட்கும் விளக்கவுரை வரைந்து வெளியிட்டு, புலவருலகம் பண்டை உரையாசிரியர்கள் வரிசையில் வைத்து, ‘உரைவேந்தர்'