பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

பஞ்ச தந்திரக் கதைகள்

`சரி, நானும் அங்கு வருகிறேன். எனக்கு அங்கே ஒரு வேலையிருக்கிறது. அதை நான் அங்கு சென்ற பின் உனக்குத் தெரிவிக்கிறேன்' என்று எலி சொல்லியது.

உடனே காகம், தன் கால்களால் எலியைத் தூக்கிக் கொண்டு ஆமையிருக்கும் குளத்தை நோக்கிப் பறந்தது.

அங்கு போய்ச் சேர்ந்ததும், ஆமை வெளியில் வந்து, காகத்தை அன்பாக வரவேற்று நலம் விசாரித்தது. பேசிக் கொண்டிருக்கும் போது, காகத்தை நோக்கி ஆமை, `இந்த எலி யார்?’ என்று கேட்டது.

`ஆமை நண்பனே, நாம் முன் வருந்திச் செய்ததவத்தால் நமக்கு அருமையாகக் கிடைத்த நண்பன் இந்த எலி. இதன் பெருமையையாராலும் சொல்ல முடியாது' என்று சொல்லிப் புறா அரசன் வேடன் வலையில் அகப்பட்டுக் கொண்டதையும் அதை எலி மீட்டதையும் விளக்கமாகக் கூறியது.

அத்தனையும் கேட்ட ஆமை, `ஆ! இவன் உண்மையான நண்பனே!' என்று சொல்லி அன்பு பாராட்டி, காகத்திற்கும் எலிக்கும் விருந்து வைத்து அவற்றோடு மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு நாள் ஆமை எலியை நோக்கி, `உன் சொந்த ஊர் எது? உன்னுடைய வரலாறு என்ன? நீ இங்கு வரக் காரணம் என்ன என்று கேட்டது.

எலி தன் வரலாற்றைச் சொல்லத் தொடங்கியது.