பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

பஞ்ச தந்திரக் கதைகள்


‘சாகிற மாட்டுக்குக் காவலென்ன காவல்!'என்று அந்த ஆளும் புறப்பட்டுப் போய்விட்டான்.

ஆனால், அந்த மாடு சாகவில்லை. நொண்டிக் காலோடு மெல்ல மெல்ல நகர்ந்து நகர்ந்து சென்று காட்டில் நன்றாக மேய்ந்தது. தீனி ஏற ஏற அது கொழுத்து வளர்ந்தது. ஊட்டத்தினால் அதன் கால் ஊனமும் சரியாகி விட்டது. பிறகு அது அந்தக் காடு முழுவதும் விருப்பம்போல் சுற்றித் திரிந்து, நன்றாக மேய்ந்து பெரிய எருதாகி விட்டது.

அந்தக் காட்டை ஒரு சிங்கம் ஆண்டு வந்தது. அந்தச் சிங்கம் தண்ணிர் குடிப்பதற்காக ஒரு நாள் யமுனை யாற்றுக்குச் சென்றது. அப்போது அந்தப் பக்கத்தில் திரிந்து கொண்டிருந்த எருது முழக்கம் செய்தது. கடல் முழக்கம் போல் அந்த முழக்கம் பெரி தாக இருந்தது. சிங்கம் அதற்கு முன் அத்தகைய பேரொலியைக் கேட்டதில்லையாகையால், நடுங்கிப் போய்விட்டது.இதேது புதிதாக இருக்கிறதே!என்று பயந்து அது தண்ணிர் குடிக்கவும் மறந்து நின்று விட்டது.

சிறிது தூரத்தில் இரண்டு நரிகள் நின்று கொண்டிருந்தன. சிங்கத்தின் அமைச்சன் பிள்ளைகளாகிய அவை இதைப் பார்த்து விட்டன. அவற்றில் ஒரு நரி, மற்றொன்றைப் பார்த்து, “நம் அரசன் ஏன் நடுங்கி நின்று விட்டான்?" என்று கேட்டது.