பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

செம்மொழிப் புதையல்


வீரமில்லாத புல்லாளாயினும் அவனையும் கணவனாகக் கொண்டு ஒழுகவேண்டியது பெண்கட்கு வகுத்துரைக்கும் முறை. இம்முறை இரண்டையும் சேர்த்துக் "கல்லென்றாலும் கணவன், புல்லென்றாலும் புருடன்,” என்ற பழமொழிதோன்றி வழங்கி வருவதாயிற்று.

"ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்பது ஒரு பழமொழி. மதுரையில் கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற அவள் கணவனான கோவலனைக் கள்வன் என்று கொலைத்தண்டனைக் கொடுத்தான் பாண்டியன். அதனையறிந்த கண்ணகி, பாண்டிவேந்தன் அவைக்களம் சென்று தன் சிலம்பைக் காட்டித் தன் கணவன் "கள்வனல்லன்," என்பதை நிலை நாட்டினாள். கோவலன் கள்வனென்ற பழியில்லாதவனானான். பாண்டியன் தான் செய்தது குற்றமென்று உடன்பட்டுக் கீழே வீழ்ந்து உயிர்விட்டான். அவனுடைய மதுரை நகர் தீப்பட்டழிந்தது. பாண்டியன் குலமும் வேரற்றுப் போயிற்று. இதனையறிந்த வேந்தனான சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கல்கொண்டு வந்து கண்ணகிக்கு வடிவம் செய்து, கோயிலமைத்து வழிபாடு செய்தான். இதனை அடிப்படையாகக் கொண்டே "ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே," என்ற பழமொழி தோன்றுவதாயிற்று. இதனை வற்புறுத்துவதற்கு வேறொரு செய்தியுண்டு. கொங்கு நாட்டில் மேற்கு மலைத்தொடரின் அடிப்பகுதியில், நன்னன் என்றொரு தலைவன் வாழ்ந்து வந்தான். பொள்ளாச்சித் தாலுகாவிலுள்ள ஆனைமலை என்னும் ஊர்க்குப் பழங்காலத்தில் நன்னனுர் என்றே பெயர் வழங்கிற்றென அவ்வூர்க் கல்வெட்டொன்று கூறுகின்றது. (Annual Report on South Indian epi, Madras No. 214 of 27-28) அவ்வூரில் அவனொரு மாமரத்தை வைத்து வளர்த்து வந்தான். அது காய்த்துப் பழுக்கத் தொடங்கியதும் அதற்குக் காவலும் ஏற்படுத்தினான். அந்த மரம் இருந்தது ஆற்றங்கர்ை. ஒருநாள் ஒரு செல்வனுடைய மகள் ஆற்றில் குளிப்பதற்குச் சென்றாள். அவள் குளித்துக் கொண்டிருக்கையில் நன்னனுடைய மாமரத்திலிருந்து நன்றாய்ப் பழுக்காத மாங்காய் ஒன்று தானே உதிர்ந்து தண்ணீரில் மிதந்துகொண்டு அப்பெண்ணருகே வந்தது. அதனை அவள் எடுத்துத்தின்றாள். அதைக் கண்ட காவற்காரன் சென்று நன்னனுக்குத் தெரிவிக்கக் கொடியவனான நன்னன் அவளைக் கொன்றுவிடுமாறு கட்டளையிட்டான். அதையறிந்த-