பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

235


மூன்றாவதாக "வாளது” என்பதிலுள்ள "அது" என்னும் சொல் குற்றியலுகரமன்று எனக் காட்டி மறுப்பது, அவர் பிறிதொரு இடத்தில் உரைத்த உரையையே மறுக்கிறது. அதாவது "உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன், புண்ண துணர்வார்ப் பெறின்” என்ற குறட்பாவின் உரையில் "புண்ண துணர்வார்" எனப் புணர்ந்ததற்கு, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது” என உரைத்தார் பரிமேலழகர், அவரே, “நாளென ஒன்று போல் காட்டி" என்ற திருக்குறள் உரையில் ‘வாளது’ என்ற விடத்து, "அஃது என்னல் வேண்டும் ஆய்தம் விகாரத்தால் தொக்கது" என்று தானே கொள்ள வேண்டும். அவ்வாறு கொள்வது உரை முறைமையன்று.

இனி ஒரிடத்தில் எழுவாய் பயனிலையைத் தெளிய நோக்காமல் தடுமாறுகின்றார் பரிமேலழகர்.

"வித்தும் இடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.”

என்ற திருக்குறட்கு ‘'மிசைவான்" என்பது எழுவாயும் ‘'வேண்டுங் கொலோ" என்பது பயனிலையும் ஆகும். அதனைத் தெளியாமல் "இடல் வேண்டும்" என்பதை எழுவாயும் பயனிலையுமாகக் கொண்டு "மிசைவான் புலம் வித்தில்லாமலே வினையும்" எனப் பொய்யுரை புகலுகின்றார். இக்குறட்பாவை உண்மை நெறியில் நின்று நோக்குவோமாயின் விருந்தோம்பி மிக்சில் மிசைபவன் (தன் பால்) உள்ளது வித்தே ஆயினும் விருந்திற்கு இடுவதே தவிர, புலத்திற்கு இடவிரும்பான் என்பது நேரிய பொருளாம்.

இங்ஙனம் ஒரு சில தவறுகள் ஆங்காங்கே காணப்படினும் பழமையிற் புதுமையும், தருக்கத்தில் இலக்கணமும், விளக்கத்திற் சுருக்கமும். நூல் வழக்கொடு உலகியலும் புகுத்தி நுண்மையும் மாண்பும் அழகும் தெளிவும் பரிமேலழகர் உரைக்கென்றமைந்த சிறப்புக்கள் என்பது யாவரும் நினைவிற் கொள்ளத் தக்கது.