பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5.யாதும் வினவல்



செங்கைமாத்து வடக்கில் உள்ளது தென்மலை. மலைச்சாரலில் காடு பசுந்தழை போர்த்து இனிய காட்சி தருகிறது. புதர்களில் பல வகைப் பூக்கள் மலர்ந்து நறுமணம் கமழ்கின்றன. தென்றல் மெல்லென வீசுகின்றது. நண்பகல் வெப்பத்தால் வெம்பி வியர்த்த செல்வமக்கள் இம் மென்காற்றின் வரவு கண்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றனர். மாலை மணி மூன்றுக்கு மேலாகியதனால் வெயிலின் வெப்பமும் சிறிது தணிந்து வருகிறது.

கானத்தின் அருகே ஓடும் காட்டாறு சிறிது அகலமாகவே உளது. செக்கர்ச் செவேரெனப் பரந்து விளங்கும் செம்மணல், சிவந்த புடவை யொன்றை நீட்டிப் புரளவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் கரையில் தென்னைகள் ஓங்கி நின்று குலைகள் தாங்கிக் காற்றில் மெல்ல அசைகின்றன. கரையருகே அழகிய ஊரொன்று தோன்றுகிறது. அதன்கண் மிகவுயர்ந்த மாடி வீடொன்று காணப்படுகிறது. அதன் பின் புறத்தே ஆற்றிற்குக் காலடிப்பாதை வருகிறது. அவ்வழியே மங்கையர் இருவர் வருகின்றனர்.

ஒருத்தி மாந்தளிர் போன்ற நிறமுடையவள். அவளது பின்னிவிட்ட கூந்தல் இடைமறையுமளவு நீண்டிருக்கிறது. பொன்னில் கல் வைத்திழைத்த வில்லையொன்று அவள் குழலில் இருந்து நல்ல அழகு செய்கிறது. கைவளைகள் கண்கவரும் வனப்புடையன. நீல நிறங்கொண்ட அவளது புடவையில் நித்திலம் தைத்தது போன்ற பூவேலைகள் இருந்து பொலிகின்றன. அவளருகே செல்பவள் இத்துணைச் சிறப்புடையளாக இல்லை. ஒத்தயாண்டினளாயினும், ஒப்பனையும் ஒழுக்கமும் நோக்கின், முன்னையவட்கு, நிலையில் தாழ்ந்தவளென்றே இவள் தோன்றுகிறாள். மணிநிறம் கொண்ட இவளது உள்ளத்தின் நேர்மையை, முகம் இனிது புலப்படுத்துகிறது. இவளை