பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்



நாடகப் பயிற்சி

தேவேந்திர நாத் தாகூரின் இல்லம் எப்போதும் ஒரு கலைக்கூடமாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கும். அவரது மூத்த மகன்களில் சிலர் நாடகம் எழுதி பொழுது போக்காக நடிப்பார்கள் இதை வீட்டார் எல்லாரும் உற்சாகத்துடன் ஒன்று சேர்ந்து வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள்.

அந்த நாடகத்தைப் பார்க்க அக்கம் பக்கத்துச் சிறுவர்களை அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். காரணம் படிக்கும் சிறுவர்கள் மனதைக் கூத்தாட்டத்திலே திளைக்க விடக் கூடாது. எதிர்காலத்தில் அவர்கள் படிப்புக்கு ஏதாவது தீமைகள் நிகழ்ந்து விடக் கூடாது என்ற அக்கறையால் சிறுவர்களைப் பார்க்கவிட மறுத்தார்கள்.

ரவீந்திரருக்கு மட்டும் இதில் விதி விலக்களிப்பார்களா என்ன? எனவே, தமது தம்பி ரவீந்திரரையும் நாடகம் பார்க்கவிடுவதில்லை. அதனால் அவர், முற்றத்தில், தோட்டத்துச் சுவரோரங்களில் நின்று கொண்டே நாடக வசனங்களைக் கேட்டு மகிழ்வார். சில நேரங்களில் எட்டியெட்டிப் பார்த்துக்களிப்பார்.

எதிர்காலத்தில் உலகம் போற்றும் நாடகங்களை எழுதப் போகும் ரவீந்திரனின் ஆற்றலை அவர்கள் எப்படி அறிவார்கள்? உலகப் பெரும் பேரறிவாளர்கள், மகாத்மா காந்தியடிகள், லோகமான்ய பால கங்காதர திலகர், பண்டிதர் மதன் மோகன் மாளவியா, சி.எஃப். ஆண்ட்ரூஸ் போன்றவர்கள் அனைவரும், ரவீந்திரரின் நாடக அறிவை, ஆற்றலைக் கண்டு பாராட்டப் போகிறார்கள் என்பதை அவருடைய வீட்டாரால் எவ்வாறு உணரமுடியும?