பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



ராஜம் கிருஷ்ணன்

31


“எங்கேயம்மா போகிறாய்?” என்று அவர்கள் கேட்டதன் வடிவே 'எல்லம்மா' என்பதாயிற்று.

“இந்த மண்ணில் எனக்கு இடமில்லை; எனது உரிமைகளை இழந்து விடச் செய்த மண்ணாகி விட்டது இது. என்னோடு வர விரும்புகிறவர்கள் வரலாம்” என்று மொழிந்த மாதங்கினியாக ரேணுகா, விடுவிடென்று நடத்து செளதத்திக் குன்றில் இருந்து இறங்கிச் சென்று, ஒர் ஆணுக்கு உரியவளாகி அடிமைபோல் வாழும் வாழ்வை ஏற்கவில்லை. பல நாட்கள் போர், போர் என்று காலம் கழித்த இவர்கள் தங்கள் கூந்தலை வாரிக் கொள்ளவும் அழகு செய்து கொள்ளவும் மறந்து போனார்கள். அழகிய கூந்தல் பரந்து திரிந்து சடை விழுந்தது. இவர்கள் அனைவரும் ‘எல்லம்ம’ தெய்வத்துக்குத் தாசியாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள்.

அறிவு பூர்வமாகப் பார்க்கும்போது, ஒரு முண்டமும் ஒரு தலையும் என்ற மாதங்கி உயிர் பெற்றிருக்க முடியாது. ஆனால் இந்தக் கருத்துடன் ஒரு வழிபாட்டுத் தெய்வம் உருவாயிற்று. ஆண் நாயகக் குழுவுக்கு அடிபணியாத இளங் குமரிகள்-கன்னியர், ‘எல்லம்ம’ தாசிகளாகி, செளதத்திக் குன்றில் ஒரு சமுதாயத்தையே தோற்றுவித்திருந்ததை இவ்வாறு கூறுகிறது. ஆனால்...