பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

இந்திய சமுதாய... /போராட்டப் பெண்மை


1956ம் ஆண்டில் குருஷ்சேவ் - புல்கானின் இருவரும் இந்தியாவுக்கு வந்தார்கள். இரும்புத்திரை போட்டுக் கொண்டிருந்த கம்யூனிச சோவியத் நாட்டிலிருந்து திரை விலக வெளி வந்த முதல் சோவித் தலைவர்கள் அவர்கள். அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்துக்கு மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்திரா, அரசு ரீதியாக, எந்தப் பதவியும் இல்லாதவளென்றாலும், பிரதம மந்திரியின் மகள், எல்லோராலும் அறியப்பட்டவர் என்ற செல்வாக்கில் பொதுக்கூட்டத்தில் தனியிடத்தில் சென்றமர இடமும் மரியதையும் பெற்றுவிட்டாள். ஆனால், தன் லோக் சபா உறுப்பினர் என்ற முத்திரையுடன், தன் அணியைச் சேர்ந்த தோழர்களுடன் உள்ளே இட மரியாதை கிடைக்க வில்லை என்பது மட்டுமில்லை, அருகே செல்லவே முடியாமல் பாதுகாப்புப் படையினரால் தடுத்து நிறுத்தப் பட்டார்.

ஃபெரோஸ் இந்த நடவடிக்கையை அலட்சியமாக வெறும் பாதுகாப்பு நடவடிக்கை என்று விட்டு விடவில்லை. மக்களவையில் இந்த முறைகேட்டைக் கொண்டுவந்து நேருவை மன்னிப்புக் கோரச் செய்யுமளவுக்குப் பிரச்னை யாக்கினார் மருமகன்.

இன்னொருமுறை, காங்கிரஸ் அகில இந்தியக் கமிட்டிக் கூட்டத்தில், தலைவர் நேரு, பிரதிநிதிகள் தத்தம் மனைவி, மக்கள் என்று உறவினரைக் கூட்டி வருவதை வன்மையாகக் கண்டனம் செய்தார்.

அப்போது ஃபெரோஸ் சட்டென்று எழுந்தார். “நான் என் மனைவியைக் கூட்டிவரவில்லை.” என்றார் பலத்த சிரிப்புக்கிடையே. ஆனால் நேரு செல்லுமிடமெல்லாம் மகள் வருகிறாளே! நேருவுக்கு மிகவும் சங்கடமாகப் போயிற்று.