பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. இலட்சிய இந்தியப் பெண்மை


பெண்கல்வி நாட்டு விடுதலைக்கும் முன்னேற்றத்துக்கும் இன்றியமையாதது என்று அறிவுறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்.

இவரைக் குருவாக ஏற்று, இந்தியாவுக்கு வந்து தொண்டாற்ற விழைந்த மார்கரெட் நோபிள் என்ற ஆங்கிலப் பெண்மணிக்கு, சகோதரி நிவேதிதா என்று பெயரைச் சூட்டி, இந்தியப் பெண்களின் கல்வித் தொண்டுக்கு உரித்தாக்கினார்.

‘இந்நாட்டில் எல்லா உயிர்களிடத்தும் மேலாம் ஆன்மிகம் இயங்குகிறது என்ற கருத்து நிலவிய போதும்’ ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே எத்துணை வேற்றுமை? ஆண்கள் பெண்களை வெறும் இயந்திரங்களாக, உழைக்கும் உயிர்களாக மாற்றியிருக்கின்றனர். வேத கால உணர்வுகள் இழிந்து (பிராம்மண) குருபீடங்கள், ஏனைய சாதியார் வேதங்களைப் படிக்கக் கூடாது என்று தடை விதித்த போது பெண்களின் உரிமைகளையும் நசுக்கி விட்டது என்று அவர் மனம் வருந்திக் கூறி இருக்கிறார்.

பையன்களுக்குக் கல்வி, பிரும்மசரியம் என்ற இரண்டும் இணைக்கப்பட்டு அவசியமாக்கப்பட்டது போல், பெண்ணுக்கும் கல்வியும் பிரும்மசரிய ஒழுங்கும் உரிமை யாக்கப்பட வேண்டும். அவர்கள் எந்தப் பிரச்சினைகளையும் தாங்களே தீர்த்துக் கொள்ளும் மன உறுதியும் துணிவும் பெறவேண்டும். வாழ்க்கையில் எந்த ஒரு சிக்கலையும் அவள் சமாளிக்க இயலாதவளாக, தொண்டடிமை நிலைக்கே அவளை பழக்கி, கண்ணிர் விட்டுப் புலம்பும் நிலையிலேயே வைத்திருப்பது கொடுமை. பெண்கல்வியை மையமாக்கியே சமயங்கள் இயங்க வேண்டும். மற்ற விதிகளெல்லாம்

இ - 8