பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முழுசாய் சில பூக்களை எடுத்துத் தந்தபோது, கண்ணில் ஒற்றி சட்டைப் பைக்குள் வைத்துக்கொண்டான். அந்தப் பூக்கள் இன்னும் அவள் தந்த 'மில்ஸ் & பூன்'ல் சருகாய் இருக்கிறது. அவன் வீடு வந்தவுடன் அந்தப் பன்னீர்ப் புஷ்பத்தையும் அந்தப் பக்கத்திலேயே வைத்தான். ஒருநாள் பக்கத்து வீட்டு நண்பர்கள் சினிமாவுக்கு இரவுக் காட்சிக்கு அழைக்க, ஒரு இரவு வித்தியாசமாகக் கழியட்டுமே என்று அவனும் ஒப்புக்கொண்டான். நேரமிருக்கவே வெளியே பேசிக் கொண்டிருந்தார்கள். ஏதோ உணர்வில் திரும்பியபோது, அதுவரை அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள். டிக்கட் வாங்கிக் கொண்டு வந்த அப்பாவுடன் அவளும், அம்மாவும் தியேட்டருக்குள் போனார்கள். அவனுக்கு முற்றிலும் எதிர்பாராமல் அவளைப் பார்த்தது நல்ல சகுனமாகப்பட்டது. இன்னொரு மனதில் அது முற்றிலும் எதிர் பாராத நிகழ்வு இல்லை என்பதாகவும் பட்டது. இந்த வேதனை நிறைந்த நாட்கள் இன்றுடன் முடியப்போவதாய்த் திடீரெனத் தோன்றிய உற்சாக உள்ளுணர்வு சொல்லியது. - படத்திலும் நாயகி, நாயகனை தவறாகப் புரிந்துக் கொண்டாள். அவனிடமிருந்து முற்றிலும் ஒதுங்கிப் போனாள். எனினும் அவனை மறக்கவொட்டாது கனவிலும் சோகப்பட்டாள். இவள் கவலை யறிந்து நாயகியைத் தோழிகள் உல்லாசப்பயணம் அழைத்துப் போனார்கள். நதிக்கரையில எல்லோரும் அமர்ந்திருக்கும்போது ஒரு காகம் நாயகியருகே வந்திறங்குகிறது. நாயகி காகத்தையே உற்று நோக்குகிறாள். முழுத்திரையையும் காகம் ஆக்ரமிக்க, பின்னணியில் மெதுவாக ஜானகி 'ஹம் செய்ய, காகம் கொஞ்சம் கொஞ்சமாய் மங்க அந்த இடத்தில் சற்று கருமையான நாயகன்முகம் தோன்ற, மிக சோகமான குரலில், உன்னத வயலின் இழைப்புடன் ஜானகி 'காக்கைச்சிறகினிலே நந்தலாலா, நின்றன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா' என்று பாடுகிறார். காமெராவும், இயக்குநரும், இசையும் சேர்ந்து ஒரு உன்னதக் காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் நாயகி முகம் எந்த உணர்ச்சியும் காட்டாது, இறுகிப் போயிருக்க, கண்ணிர் அனிச்சையாய் வழிந்து கொண்டிருக்க, சுட்டுவிரலை நீட்டி நின்று எரியும் தீபத்தைத் தொட்ட போது தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா என்று ஜானகி 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்-மீரா.pdf/93&oldid=463999" இலிருந்து மீள்விக்கப்பட்டது