பக்கம்:நல்ல நண்பர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



“எங்கே அம்மா கஸ்தூரி ? வீரனுடன் வெளியே போயிருக்கிறதா ?” என்று கேட்டாள் சீதா.

'இல்லை.பம்மா கஸ்தூரி யாரோ ஒருவருடையதாம். அவர் வந்து, அதை வாங்கிக்கொண்டு போய்விட்டார்” என்றாள் அம்மா.

இதைக் கேட்டதும் சீதாவும் முரளியும் திடுக்கிட்டார்கள்.

"நிஜமாகவா, அம்மா அவர் யாரம்மா ? நான் போய் வாங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். பணம் கொடுத்தால் தரமாட்டாரா அம்மா ? ஏனம்மா கொடுத்தாய்?” என்று கோபத்துடன் கேட்டான் முரளி.

"வா அண்ணா அப்பாவிடம் போய் ரூபாய் வாங்கிக் கொண்டு நாம் போகலாம். கஸ்தூரியை வாங்கிப்போனவர் எங்கே அம்மா இருக்கிறார் சொல்லம்மா !” என்று அம்மாவின் தோளைப் பிடித்துக் குலுக்கிக்கொண்டே கேட்டாள் சீதா.

"அவர் யாரோ, எனக்குத் தெரியாது. வாத்து என்னுடையது. அதை நீங்கள் தருகிறீர்களா, அல்லது போலீஸில் சொல்லட்டுமா ?’ என்று கேட்டார் ; பயந்து போய்க் கொடுத்துவிட்டோம்!” என்றாள் அம்மா.

சீதாவுக்கும் முரளிக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கலங்கிய கண்களோடு வாசலில் நின்று கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம் வந்துவிட்டது வீரன். அது தாவிக்கொண்டு சந்தோஷமாக அவர்கள் அருகில் வந்தது. ஆனால், அதை அவர்கள் ஓடிப்போய் எதிர் கொண்டு அழைக்கவும் இல்லை; மகிழ்ச்சியோடு வரவேற்கவும் இல்லை !

14