பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

பாஸ்கரத் தொண்டைமான்


இப்படி எல்லாம் வளர்ந்த கோயில் கால வெள்ளத்தாலும், கடல் அலைகளாலும், நலியத் தொடங்கி இருக்கிறது. இந்தச் சமயத்தில் தான் மெளனசுவாமி கோயில் திருப்பணியை மேற்கொண்டிருக்கிறார். அவரும் அவருக்குப் பின் திருப்பணியைத் தொடர்ந்து நடத்திய வள்ளிநாயக சுவாமிகளும் தான், இன்று நிலை பெற்றிருக்கும் கற்கோயிலையும், ராஜகோபுரத்தையும், மற்றய மண்டபங்களையும் கட்டி முடித்திருக்கிறார்கள். இந்தத் திருப்பணி வேலை சென்ற எண்பது ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இன்னும் செய்ய வேண்டியதும் எவ்வளவோ இருக்கிறது.

இந்த கோயிலில் இன்றும் சிறப்பாக நடைபெறும் விழாக்கள் மூன்று. ஆவணி, மாசி மாதங்களில் நடப்பவை பெரிய திருவிழாக்கள். இவைகளைவிட இங்கு நடக்கும்-முக்கியமான திருவிழா கந்தசஷ்டி திருவிழாத்தான். ஆம், சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் என்ற மூவரையும் வென்று வெற்றி சூடிய கந்தனுக்கு, கார்த்திகேயனுக்கு நடத்தும் திருவிழா அல்லவா? இந்த விழா நடப்பது ஐப்பசியில், சுக்லபக்ஷத்தில் ஆறு நாட்கள். சஷ்டி திதி அன்று சூரசம்ஹார லீலை கடற்கரையிலேயே நிகழும். செந்தில் நாயகர் உலாப்போந்து, பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார். ஆறு நாட்களும் விரதம் இருக்கும் அன்பர்கள் ஆணவம், கன்மம், மாயையினின்றும் விடுபட்டு பேரின்பம் எய்துவர் என்பது நம்பிக்கை. காமம், குரோதம், லோபம் முதலிய தீய குணங்களை நம்மிடம் இருந்து அகற்ற இந்த விழாக்களும் விரதங்களும் தானே துணை புரிய வேண்டும். அந்த நம்பிக்கையே இந்த சஷ்டி விரதம் அனுஷ்டிப்பவர்களுக்கு எல்லாம் எல்லா நலனையும் கொடுக்கிறது.