பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பாஸ்கரத் தொண்டைமான்


துறவுக்கோலம் பூணுகிறான். இல்லாவிட்டால் அவனுக்கு பற்று, துறவு என்றெல்லாம் உண்டா?

இத்துடன், அவன் வள்ளுவன் சொன்ன மற்றொரு உண்மையையும் நன்றாக அறிந்தவன். இவ்வுலகத்தின் செலாவணி நாணயம் பொருள். அதுபோல பேரின்ப உலகத்திற்கு செலாவணி நாணயம் அருள். இரண்டும் இல்லாமல் வாழ்வு பூர்த்தியாகாது.


அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு

என்று தெரியாமலா சொன்னான் வள்ளுவன். இதைத் தெரிந்து முருகனே அருளையும் பொருளையும் சேர்த்தே மக்களுக்கு வழங்க, ஆண்டியாக வேடம் புனைந்து ஆண்டவன் ஆகிறான். ஞானப் பழமாக, ஞான பண்டிதனாக நின்று, நமக்கெல்லாம் ஞானம் புகட்டுகிறான்; மங்கயைர் இருவரை மணந்து நல்ல மணவாளன் ஆகிறான். செல்வம் கொழிக்கும் சீரலைவாயிலில் சிறந்த செல்வனாகவே வாழ்கிறான். எல்லாம் மக்களினம் உய்யத்தான்.


ஏரகமும் என்னகமும் பிரியாத
இளையானை இறைஞ்சல் செய்வாம்

வில்லேந்திய வேலன்

கங்கையாற்றின் கரையிலே சிருங்கிபேரபுரம் என்று ஓர் ஊர். அங்குள்ள வேடர் தலைவன் - குகன். கங்கையிருகரையையும் கணக்கிறந்த நாவாய்களையும் உடையவன் அவன். அவனுக்கு சக்ரவர்த்தித் திருமகன் ராமனிடத்து அளவிடற்கரிய அன்பு, தாய் உரைசெய, தந்தை ஏவ கானாளப் புறப்படுகின்றான் ராமன், லக்ஷ்மணனும் சீதையும் உடன் வர கங்கைக்கரை வந்து சேர்கிறான். கங்கையைக் கடக்க ஓடம் விடுகிறான் குகன். 'என் தம்பி, உன் தம்பி, இந் நங்கை நின் கொழுந்தி, நான் உன் தோழன் என்றெல்லாம் கூறி, குகனது அன்பைப் பாராட்டுகின்றான் ராமன். ராமனுடன் தானும் காட்டுக்கே வருவேன் என்று குகன் பிடிவாதம் செய்த போது, ராமன், தம்பி நீ இங்கேயே இரு. நான் நாடு திரும்புகிற போது உன்னிடம் வந்து தங்கி, உன்னையும் அழைத்துக் கொண்டே அயோத்தி செல்கிறேன் என்று சொல்லிப் பிரியா விடை பெறுகிறான். தெற்கே