பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. சீதையின் கதை


ருக்வேதம் நான்காம் மண்டலத்தில் (IV-5-12) ஸீதா என்ற தேவதை துதிக்கப்படுகிறாள். மக்கள் நிலத்தை உழுது பண்படுத்தி, தானியம் விளைவித்து உண்டு வாழும் நாகரிகம் சமுதாயத்தில் வந்துவிட்டதை இப்பாடல்கள் பிரதி பலிக்கின்றன.

இங்கே ஸீதை என்ற சொல்லுக்கு, கலப்பை என்ற பொருள் கொள்ளலாம்.“மங்களமான ஸீதையே! உன்னைப் போற்றுகிறோம்! இந்திரன் ஸீதையைக் கொள்ளட்டும்! பூஷான் வழிநடத்திச் செல்லட்டும்!... உழுமுனைகள் நிலத்தில் பதிந்து கிளர்த்தட்டும்! வானம் மழை பொழியட்டும்!” என்றெல்லாம் அருள் வேண்டப்படுகிறது.

இராமாயண இதிகாசம், இந்த நாகரிக மேம்பாட்டை அடிப்படையாக்கி, சீதையை நாயகியாக்கிப் புதிய மானிட தருமங்களை நிலைநிறுத்துகின்றது. இந்தத் தருமம், நிலவுடைமைச் சமுதாயத்தின் ஆணாதிக்க நீதியாகி பெண்ணின் அடிப்படை மனித உரிமைகளைக் கட்டுப்படுத்துகின்றது.

சீதையும் நிச்சயமாக ஒரு தாயின் வயிற்றில்தான் உதித்திருக்க வேண்டும். பூமியில் கிடைத்தாள் என்றால், பூமி நஞ்சுக் கொடியும் நிணமும் குருதியுமாக மகவை பிரசவித்ததா? எனவே அறிவுக்குப் பொருந்தும் வகையில் பார்க்க வேண்டியிருக்கிறது, குந்தியைப்போல் கன்னி கழியுமுன் கருப்பமாகி, சமுதாய நிர்ப்பந்தத்தின் காரணமாக கானகத்தில் கிடத்திவிடும் தாய் ஒருத்தியின் மகளா?

உயர் வருக்கத்து ஆண், கானகத்தில் வாழ்ந்த திருந்தா மக்களிடையே பிறந்த ஒத்தியுடன் கூடி, பிறந்த குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடவேண்டும் என்ற நிபந்தனையின் பயனாகப் பூமிக்கு மகளானாளா?