பக்கம்:பாரதித் தமிழ்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

பாரதி தமிழ்


திருநெல்வேலிக் கலெக்டர் வின்சின் அழைப்பை ஏற்றுக்கொண்டு அவரைக் காணச் சென்றவிடத்தில் அவரைக் கைது செய்தார்கள். கைது செய்யுமுன் வின்சிற்கும் சிதம்பரனாருக்கும் நடந்த வாக்குவாதமாகப் பாரதியார் இரண்டு பாடல்களை எழுதினர். ஆங்கிலேயன் ஒரு தேச பக்தனுக்குக் கூறுவது; தேச பக்தன் ஆங்கிலேயனுக்குக் கூறும் மறுமொழி என்ற தலைப்புக்களோடு அப் பாடல்கள் பாரதி நூல்கள்-முதல் தொகுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால் 1909-ல் பாரதியார் வெளியிட்ட ஸ்வதேச கீதங்களின் இரண்டாம் பாக மாகிய ஜன்மபூமி என்ற நூலில் இப் பாடல்களுக்குக் கலெக்டர் வின்சின் ஸ்ரீசிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல், கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீசிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி என்ற தலைப்புக்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சிதம்பரனாரின் சார்பிலே ஒரு சாட்சியாகப் பாரதியாரும் சென்றிருந்தார்.

1908 ஜூலை மாதம் 7-ஆம் தேதி சிதம்பரனாருக்கு அரச நிந்தனைக் குற்றத்திற்காக இருபது வருடமும், சுப்பிரமணிய சிவாவுக்கு உடந்தையாக இருந்ததற்காக மேலுமோர் இருபது வருடமும் ஆக நாற்பது வருடம் தீவாந்தர தண்டனை விதிக்கப் பட்டது. சிவாவுக்குப் பத்தாண்டு தீவாந்தர தண்டனை.

இவ்வாறு நாடு கடத்தப்படுவதால் தேசத்திற்குச் செய்யக்கூடிய சேவையில் தடையேற்படும்: ஆதலால் அதை எவ்வகையிலாவது தவிர்த்துத் தாம் செய்யக்கூடிய சேவையை நாட்டிற்குச் செய்ய வேண்டும் என்பது அக்காலத்தவரின் பொதுவான கருத்து. காந்தீய வழியிலே சத்தியாக்கிரகம் செய்து சிறை செல்லுவதே ஒரு தருமமாக அப்பொழுது இந்திய அரசியல் அரங்கிலே காந்தியடிகள் தோன்றாத காலம் அது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/38&oldid=1539931" இலிருந்து மீள்விக்கப்பட்டது