பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

மருத்துவ விஞ்ஞானிகள்


ரோஸ் செய்த : மலேரியா ஆய்வு

நல்ல காலமாக, ரோஸ் புலமையாளராக மாறியிருந்தால், மருத்துவத் துறை பெரும் தொழில் நுட்ப நட்டத்தைத்தான் பெற்றிருக்கும். மலேரியா நோய் இவரால் ஒழிக்கப்பட்டது என்ற நிலை ஏற்பட்டிருக்காது அல்லவா?

ரோஸ் மனசாட்சி உடையவராக விளங்கினார். அதனால் தான், தந்தை விரும்பிய மருத்துவத் துறைக்கு அரும்பாடுபட்டார் எனலாம். அந்தத் துறைக்கே முழு நேர ஆராய்ச்சியாளராகவும் அவர் பயன்பட்டார்.

தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட தொழிலை அவர் வெற்றிகரமாக முடிக்கும் மனோதிடமும், ஊக்கமும், ஆக்கமும் உடையவராகவே உழைத்தார் ரோஸ் என்றால் - அது மிகையுமன்று.

மனித இனத்திற்குப் பெரும் பகையாக விளங்குவது நோய். அது எந்த நோயாக இருந்தாலும் பகை பகைதானே என்ற சிந்தனை உடையவராகவே ரோஸ் இருந்தார். அதற்காக, நோய்களின் காரணங்களை, அதன் பொருளை ஆழமாக உணர்ந்து, புரிந்து செயல்பட்டால் நோய்களை ஒழித்துவிட முடியும் என்ற பொதுவானக் கருத்து அவர் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. அதனால் தான், இந்திய மக்களை வாட்டி வதைத்துக் கொன்றொழிக்கும் மலேரியா நோயின் உற்பத்திக் காரணங்களைக் கண்டறிய முனைந்தார் ரோஸ்.

ரோஸ் குடியிருந்த வீடு ஒரு பெரிய மாளிகை போன்ற தாகும். அதைச் சுற்றிப் பூந்தோட்டம் உண்டு. அந்த மாளிகையின் பலகணி விளிம்புகளில் பூந்தொட்டிகள் அதிகமாக வைக்கப் பட்டிருந்தன. அவை அழகுக் காட்சிக்காக அடுக்கடுக்காகப் பரப்பப்பட்டு இருந்தன.

அவற்றை ரோஸ் தினந்தோறும் பார்த்து, அந்த மலர்களின் அழகுகளை ரசிக்கும்போது, பூந்தொட்டிகளில் ஏராளமான கொசுக்கள் செடிகள் மீதும் பூக்கம் மேலும் மொய்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்தார்.