பக்கம்:கவியரசர் இரவீந்திரநாத் தாகூர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

கவியரசா் இரவீந்திரநாத் தாகூர்


கொள்ள மறுத்து விட்டார். அம்மையாரும் அவரது எண்ணத்தை வரவேற்றார்.

மனைவி மிருணாளினி தேவியோடு கவிஞர் தாகூர் சாந்தி நிகேதன் சென்று அமைதியை நாடினார்! மற்றவர்கள் எப்படி அங்கே குடிசையிலே வாழ்ந்தார்களோ, அதுபோல தாகூரும் தனக்கென ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு வாழ்ந்தார்! எளிமையான உணவு வகைகளையே அவர் உண்டார்.

மிருனாளினி அம்மையார், கணவருடைய கொள்கைகளையும், அவரது மன உறுதிகளையும் ஏற்று, மதித்து அவருக்குத் தக்கவாறு, உண்மையான வாழ்க்கைத் துணைவியாக நடந்தார்! கவிஞர் ரவீந்திரரும் தனது மனைவியின் அற்புதமான குடும்பச் சேவையை எண்ணிப் போற்றினார்!

இவர் மனைவியாக வாய்த்த அருமையைதாம் பெற்ற பெரும் பேறாகவே மதித்தார். சில நேரங்களில் சமையலறைக்கே வந்து மனைவிக்கு தக்கபடி உதவுவார்!

மிருனாளினி தேவியார் திடீரென நோய் வாய்ப்பட்டார். படுத்த படுக்கையாக இரண்டு மாதம் நோயால் வருந்தினார்! வேதனைப்பட்டார்! அப்போதெல்லாம் கவிஞர் பெருமான் தாகூர், தனது மனைவி அருகேயே அமர்ந்து, வாடிய முகத்தோடு இரவு பகல் என்று பாராமல் கண் விழித்தபடியே விசிறிக் கொண்டே இருந்தார்! மனைவியின் அருமைச் செயல்களை எண்ணியெண்ணி மனம் தளர்ந்து, அம்மையாரின் இறுதி நேரம் வரை அருகிருந்தே எல்லாப் பணிகளையும் செய்தார்! அதைப் பார்த்து சாந்தி நிகேதனே வியந்து இந்தக் கணவன்-மனைவி உறவினைப் பாராட்டியது.