பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78


விட்டான். அதன் பிறகு அக்கோபுரப் பணி முற்றுப் பெறாமலேயே நின்று விட்டது. அவன் வழியில் வந்த மன்னர்கள் யாரும் அப்பணியைத் தொடர்ந்து செய்ய முன் வரவில்லை, குத்பு தீனுடைய மசூதிக்கு மறுபுறத்தில் முற்றுப்பெறாத இக்கோபுரத்தின் அழிவுச் சின்னங்களை இன்றும் காணலாம்.

பிரோஜ்ஷா வினுடைய ஆட்சிக் காலத்தில் டில்லியில் ஒரு நில நடுக்கம் ஏற்பட்டது. அந்நில நடுக்கத்தால் குதுப்மினாரின் உச்சியிலுள்ள இரண்டு மாடிகள் சிதைந்தன. பிரோஜ்ஷா அவற்றைப் புதிதாக அமைத்து ஓர் அழகிய தாழ்வாரத்தையும் சேர்த்தான். இம்மாடிகள் கி. பி. 1505 ஆம் ஆண்டு சிக்கந்தர் லோடியினால் மீண்டும் பழுது பார்க்கப்பட்டன. கி. பி. 1794 ஆம் ஆண்டில் குதுப்மினார் மீண்டும் பழுதடைந்தது. மேஜர் ஸ்மித் என்ற பொறியியல் வல்லுநர் இதைப்பழுது பார்த்ததோடு இதன் உச்சியில் மற்றொரு தாழ்வாரத்தையும் அமைத்தார். கி. பி. 1848 ஆம் ஆண்டு இந்திய நாட்டின் தலைமை ஆளுநராக விளங்கிய ஹார்டிஞ்சு பிரபு இத்தாழ்வாரங்களை அகற்றி விட்டார். இத்தாழ்வாரங்கள் குதுப்மினாருக்கும் தங்கல் மனைக்கும் நடுவிலுள்ள பூங்காவில் கிடக்கின்றன.

பிரோஜ் ஷாவினால் புதிதாக அமைக்கப்பட்ட அவ்விரண்டு மாடிகளும் வெண்மையான சலவைக் கற்களால் கட்டப்பட்டவை; பளபளப்பானவை. அவற்றிற்கு அடிப்புறத்திலுள்ள மூன்று மாடிகளும் செந்நிறக் கற்களால் கட்டப்பட்டவை.