பக்கம்:மருத்துவ விஞ்ஞானிகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72

மருத்துவ விஞ்ஞானிகள்



இலண்டன் நகரில் ஆஸ்லர் தங்கி இருக்கும்போது, இரத்தத் தின் இயற்கை தன்மை என்ன? என்பதை, ஆராய்ச்சி செய்து ஒரு புதிய தத்துவத்தை 1874-ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார்.

உடனே மக்கில் பல்கலைக் கழகம் வில்லியம் ஆஸ்லரைக் கனடாவுக்கு அழைத்தது. தனது பல்கலைக் கழகத்து மருத்துவத் துறையிலேயே ஒரு விரிவுரையாளராக நியமித்துக் கொண்டது. ஆஸ்லர் அந்தப் பணியை தனது முயற்சிக்குரிய வெற்றிப் படிக்கட்டாகக் கருதி ஏற்றுக் கொண்டு உழைத்தார்.

விரிவுரையாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஆஸ்லர், மருத்துவத் துறையில் மாணவர்கள் மென்மேலும் முன்னேற வேண்டும் என்ற அக்கறையால், தாம் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெற வேண்டும் என்ற விஞ்ஞான வேட்கை வளர்ச்சியோடு, மாணவர்களுக்கு வகுப்பில் பாட போதனைகளைச் செய்து - அவர்களது அன்பைப் பெற்று வந்தார். அதனால் ஆஸ்லரிடம் பயிற்சி பெற்ற மருத்துவ மாணவர்களிடம் அவர் ஓர் அபூர்வ பிறவி என்ற புகழைப் பெற்றார்.

மருத்துவ விரிவுரையாளர் பணியில் ஆஸ்லருக்குப் போதிய வருமானம் வரவில்லை. என்றாலும், மேலும் சில புதிய ஆராய்ச்சிகளைச் செம்மையாகச் செய்ய முடியாததை உணர்ந்த ஆஸ்லர், தனியாக, சொந்தமாகத் தனது தொழிலைச் சில மாதம் நடத்திப் பார்த்தார்.

அதுவும் அவருக்கு மன நிறைவை அளிக்காததால், ஏழைகளுக்கு இலவசமாக ஏதாவது சிகிச்சை அளிக்கலாம் என்ற முயற்சியில் முனைந்தார்.

எந்தத் தொழிலிலும் அவருக்குரிய வருவாயும் வரவில்லை. புதியன எதுவும் கண்டுபிடிக்கவும் வாய்ப்பில்லை என்பதைப் புரிந்து கொண்ட ஆஸ்லருக்கு, மருத்துவத் தொழிலைச் செய்வதைவிட, மருத்துவ ஆராய்ச்சிகளைச் செய்யலாம் என்ற ஆர்வம் வந்தது. அதனால் செய்து கொண்டிருந்த மருத்துவத் தொழிலையும் அவர் கை விட்டார்.