பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ.மு.பாஸ்கரக் தொண்டைமான்

ருக்கின்றன. எல்லா நடன வகைகளிலும் நடனம் ஊடுருவி நிற்கும் நவரசங்களையும் அபிநயம் மூலமாகவே நடனம் ஆடுபவர்கள் உருவாக்கிக் காட்ட வல்லவர்கள். இந்நடனக் கலைகளில் எல்லாம் சிறப்பான கலை பரத நாட்டியம்தான் என்று எல்லோரும் ஒருமுகமாக ஒப்புக் கொள்கிறார்கள். இது நமது தமிழ் மக்களின் தனி உடைமை, பரத நாட்டியம் பயில்வது என்பது சிரமமானதுதான் என்றாலும் நாளடைவில் பயிற்சியில் தேறத் தேற, ஆடுவதில் ஒரு மகிழ்ச்சியும் இன்பமுமே தோன்றும். கைவழி நயனம் செல்ல, கண்வழி மனமும் செல்லும் வகையில் கண்ணும் கைகளும் சேர்ந்து ஒரு உணர்ச்சியை உருவாக்கிக் காட்டும். நடனத்தில் லயித்து, அதில் ஈடுபாடு ஏற்பட்டுவிட்டால், உடல் முழுவதுமே இசை பாடுவது போன்ற உணர்ச்சி ஏற்படும். ஆடுபவர்களின் கற்பனை வளத்துக்கு எவ்வளவோ இடம் உண்டு. இக்கலையில் ஆடை அணிகள் அவ்வளவு முக்கியமில்லை என்றாலும், ஆடுவதற்கு வசதியாக இருப்பதற்காகவும், நடனத்துக்கு மேலும் அழகும் கவர்ச்சியும் ஊட்டுவதற்காகவும் பரத நாட்டியத்துக் கென்றே அமைந்த உடை வகைகளும் உள. இப்படி, பரதநாட்டியக் கலை சிறப்பான அம்சமாகவே நமது சமுதாயத்தில் வளர்ந்து வந்திருக்கிறது.

பாரத நாட்டுக் கலைகளின் சிறப்பைப் பற்றி எல்லாம் ஓரளவு தெரிந்து கொண்டோம். இவற்றின் முக்கியம் என்னவென்றால், பாஷையும் பழக்க வழக்கங்களும் வேறுபட்டிருந்தாலும், எல்லாக் கலைகளிலும் ஒருமைப்பாடு உயிரோட்டத்துடன் நிற்கப் பார்க்கிறோம்.

20