பக்கம்:ஆறுமுகமான பொருள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆறுமுகமான பொருள்

31




நம் செந்தில் மேய வள்ளி மணாளர்க்குத் தாதை
கண்டாய்

என்று தானே உரிமையோடு பாடுகிறார். இப்படி எல்லாம் சங்க காலத்திலும் தேவார காலத்திலும் - செந்தில் என்று வழங்கிய ஊரே பின்னால் செந்தூர் என்று பெயர் பெற்றிருக்கிறது.

இத்திருத்தலம் திருநெல்வேலி ஜில்லாவில், திருநெல்வேலிக்கு கிழக்கே முப்பத்தெட்டு மைல் தொலைவில் இருக்கிறது. அலைவாய் என்ற பழைய பெயருக்கேற்ப, மன்னார்குடாக்கடல் கரையிலே ஒரு சின்னஞ்சிறு பட்டினமாக இருக்கிறது. இந்தக் கடற்கரையிலே அன்றிருந்த கந்த மாதன பர்வதம் ஒரு பெரிய மணற்குன்றாக இருந்திருக்க வேண்டும். முருகன் விரும்பியபடி மயன் கோயிலை முதன் முதல் உருவாக்கி இருக்கிறான். தேவகம்மியனால் அமைக்கப்பட்ட திருக்கோயில் -நாளாக நாளாக விரிந்து பெருகியிருக்கிறது. இன்றைய சண்முகர் சந்நிதி பின்னர்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். சுற்றியிருந்த மணல் குன்றுகள் எல்லாம் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு பிரகாரங்களாக உருப்பெற்றிருக்கின்றன. மணற்குன்றே வட பக்கத்தில் ஒரு மதிலாக இருப்பதை இன்றும் காண்கிறோம். இம் மணல் குன்றின் தாழ்வரையில் ரங்கநாதர் பள்ளி கொண்டிருக்கிறார்.

இந்தக் கோயிலை இன்னும் விரிவாகக் கட்டியிருக்கிறார்கள் பாண்டிய மன்னர்களும் சேர அரசர்களும். வரகுண மாறன், மாறவர்மன், விக்கிரம பாண்டியத் தேவர் முதலியோர் கோயில் நிர்வாகத்திற்கு வேண்டிய நிபந்தங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள், நிலதானம் செய்திருக்கிறார்கள், நந்தா விளக்குகளை நிறுவியிருக்கிறார்கள். இவை எல்லாம் பதின்மூன்றாம் நூற்றாண்டிலேயே ஏற்பட்டிருக்கின்றன. கி.பி.1729 முதல் 1758 வரை திருவாங்கூரை ஆண்டுவந்த மார்த்தாண்டவர்ம மகாராஜா தான் இந்த கோயிலில் உதயமார்த்தாண்டக் கட்டளையை ஏற்படுத்தியிருக்கிறார். இவருடைய அடிச்சுவட்டிலே தமிழ்நாட்டு ஜமீன்தார்களும், செட்டியார்களும், பிறரும் மற்றக் கட்டளைகளுக்கு வேண்டும் நிலங்களையும் சொத்துக்களையும் அளித்திருக்கிறார்கள்.