பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சேர்வராயன் மலைமீது எத்தனையோ கண்ணைக் கவரும் இடங்களும், இயற்கை அழகு பொங்கித் ததும்பும் வண்ணப் பீட பூமிகளும் உள்ளன. ஆனால் அவ்விடங்களிலெல்லாம் இவ்வூர் அமைக்கப்படாமல், இவ்விடத்தில் அமைக்கப்பட்டதற்குக் காரணம், சேலத்திலிருந்து இவ்விடம் எளிதில் வந்தடைவதற்கு ஏற்றதாக உள்ளது. மற்றுமோர் காரணம், சேர்வராயன் மலைகளின் மற்றப் பகுதிகள் கண்டு ஆராயப்படுவதற்கு முன்பாகவே, இவ்விடம் கண்டறியப்பட்டு, எதிர்கால ஏர்க்காடு நகரம் உருவாவதற்கு வேண்டிய ஒருசில கட்டடங்கள் அமைக்கப்பட்டுவிட்டன. கி. பி. 1841-ஆம் ஆண்டு ஜெ. எம். லெச்லர் (Rev J. M. Lechier) என்ற பாதிரியார், அப்பொழுது சேலம் மாவட்டத்தில் துணைத் தண்டல (Sub Collector) ராக இருந்த பிரெட் (Brett) என்பவரோடு மலைவளங் காண வந்தபோது, ஏர்க்காட்டின் முதல்வீடு உருப் பெற்றது. திருவாளர் பிரெட் கலை உள்ளம் படைத்தவர். வீடுகளை அமைப்பதற்கு எழில் மிக்க இடங்களைத் தேர்ந்தெடுப்பதில் பெருவிருப்பம் கொண்டவர். கி. பி. 1845-இல் ஓரழகிய மனையை அமைத்தார். அவ்வில்லம் இப்போது, ஃபேர் லான்ஸ் ஓட்டல் (Fair-Lawns Hotel) என்ற பெயரோடு விளங்குகிறது. உடனே ‘கிரேஞ்’ என்ற கட்டடமும் உருவாகியது. இது கற்களினால் உறுதியாகக் கட்டப்பட்ட ஈரடுக்கு மாளிகை.

கி. பி. 1857-ஆம் ஆண்டு வட இந்தியாவில் முதல் உரிமைப் போர் நடந்ததைப் பற்றி அறிவோம். நானா சாகப், ஜான்சிராணி, பகதூர்ஷா ஆகியோர் அப்போரை முன்னின்று நடத்தினர். ஆங்கில வரலாற்றாசிரியர்களால் அந் நிகழ்ச்சி ‘சிப்பாய்க் கலகம்’ (Soldiers’ Mutiny) என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அதைப் போன்ற கிளர்ச்சி சென்னை மாநிலத்தில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால்