பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

415

நேர்ந்தது. இவ்வாறு இவர்களெல்லோரும் தோற்று ஓடிக் கொண்டிருக்கும் போது பகதத்தன் என்பவன் மட்டும் தன்னிடம் எஞ்சிய கெளரவசேனையை ஒன்று திரட்டிக் கொண்டு மீண்டும் தருமனை எதிர்த்து வந்தான். அவனோடு வேறுசில அரசர்களும் ஒன்று சேர்ந்து கொண்டார்கள். பிணத்துக்கு உயிர் வந்தது போல் அசம்பாவிதமான ஒருவகைத் தைரியம் இவர்களுக்கு ஏற்பட்டிருந்தது. வேகமாகக் களத்திற்குள் நுழைந்த பகதத்தன் என்ற அரக்கன் சற்றும் எதிர்பாராத விதமாகத் தருமனை நோக்கி முன்னேறினான். இதைப் பின்புறமிருந்து பார்த்துக் கொண்டே இருந்த வீமன் தன் கதாயுதத்தை ஓங்கிக் கொண்டு அவன் மேல் பாய்ந்தான். பகதத்தனுக்கும் வீமனுக்கும் போர் மூண்டது. யானை மேல் ஏறிப் போர் செய்ய முயன்றான் பகதத்தன். அவனை யானையிலிருந்து கீழே தள்ளி மார்பெலும்புகள் நொறுங்கும்படியாக ஓங்கி ஓர் அறை அறைந்தான் வீமன், அந்த அறையையும் வாங்கிக் கொண்டு பக்கத்திலிருந்த ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான் பகதத்தன் தேரில் ஏறியவுடனே வில்லை வளைத்து வீமன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் திணறிய வீமனின் கையிலிருந்து கதாயுதம் நழுவிக் கீழே விழுந்து விட்டது. பகதத்தன் ஏவிய அம்புகள் மார்பிலும் தோள் பட்டையிலுமாகத் தைக்கத் தொடங்கின. வீமனுக்கு அடக்க முடியாத சினம் மூண்டு விட்டது. தானும் ஒரு தேரின் மேல் தாவி ஏறிக் கொண்டான். வில்லை எடுத்துப் பகதத்தன் மேல் அம்புமாரி பொழிந்தான். வீமனுடைய அம்புமாரியைத் தாங்கமுடியாமல் பகதத்தன் தேரிலிருந்து கீழே குதித்தான். அதைக் கண்டு வீமனும் கீழே குதித்தான். இருவரும் விற்போரை நிறுத்தி விட்டு மற்போரைத் தொடங்கினார்கள். மற்போருக்கென்றே வாகாக அமைந்த உடல் வீமனுக்கு. பகதத்தனைப் போதும், போதும், -என்று நினைக்கும் படியாகச் செய்து விட்டான் வீமன். மற்போரிலும் தோல்வியடைந்த பகதத்தன் தளர்ந்த நிலையிலிருந்த தன் யானையின் மத்தகத்தில் தாவி ஏறிக் கொண்டு தப்பி