பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

246

அறத்தின் குரல்


“நீ பேசுவது சிறிதும் நன்றாயில்லை அர்ச்சுனா! உனக்கு மட்டும் முனிவர் சாபம் கொடுத்துவிட்டால் நாங்கள் அதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியுமா? வருகிற துன்பத்தை எல்லோருமே அனுபவிப்போமே?” -என்றான் தருமன். நகுலன் கூறினான்:

“என்ன போதாத வேளையோ தெரியவில்லை. நமக்குத் துன்பங்கள் அடுக்கடுக்காக வந்து கொண்டிருக்கின்றன. துருவாசர் திடீரென்று விருந்துக்கு வந்து கொடுத்த துன்பத்தைக் கூடத் தவிர்த்துவிட்டோம். இப்போது இந்தப் புதிய துன்பத்திலிருந்து தப்ப வழி தெரியவில்லை. முன்போலவே கண்ணபிரானைத் தியானம் செய்வோம். அவன் வந்து உதவினால்தான் இத்துன்பம் தீரும் போலும்.”

“இப்படிச் செய்தால் என்ன? அமித்திர முனிவர் மரத்திலிருந்து கனி வீழ்த்தப்பட்டிருப்பதை அறிந்து நம்மைச் சபிப்பதற்கு முன்னால் நாமே ஓடிச்சென்று கனியை அவர் முன்பு வைத்து வணங்கி மன்னிப்புப் பெற்றுவிட்டால் ஒரு துன்பமுமில்லையே?” -சகாதேவன் கூறினான்.

“எல்லாம் என் ஆசையால் வந்த தீவினை. நான் அந்தக் கனியைக் கேட்டிருக்கவில்லை என்றால் இவ்வளவு துன்பமும் ஏற்பட்டிருக்காது” என்று தன்னை நொந்து கொண்டாள் திரெளபதி.

கண்ணபிரானை அழைத்து உதவி வேண்டுவதைத் தவிர வேறுவழியில்லை என்று தோன்றவே தருமன் கருணைக் கடலான கண்ணபிரானை எண்ணினான். எண்ணிய அளவில் அடியார் முன் தோன்றித் துயர் தீர்க்கும் அப்பெருமான் உடன் தோன்றினான். பாண்டவர்கள் அவனை வணங்கிப் பணிவோடு தங்கள் நிலையைக் கூறினார்கள். “இப்போது என் உதவியைக் காட்டிலும் உங்கள் சொந்த தருமம் தான் உங்களைக் காக்க வேண்டும். நீங்கள் ஐவரும் திரெளபதியும் உங்கள் மனத்திலுள்ள எண்ணங்களைச் சிறிதும் மறைக்காமல் வெளியிட்டால் இந்தக் கனி ஒருவேளை தான்