பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

518

அறத்தின் குரல்

அர்ச்சுனனை எப்படியாவது கொன்று தீர்த்துவிடுவது என்று தீர்மானித்துக் கொண்டு அதற்கென்றே தான் பல நாட்களாகப் பத்திரப்படுத்தி வைத்திருந்த நாகாஸ்திரத்தை எடுத்தான் கர்ணன். காண்டவ தகனம் முடிந்த தினத்தில்லிருந்தே அர்ச்சுனனைப் பழி வாங்குவதற்குக் கர்ணனிடம் வளர்ந்து வந்தது அந்த அஸ்திரம். நாகாஸ்திரத்தை வில்லிலே வைத்துத் தொடுத்து அர்ச்சுனனுடைய கழுத்துக்கு நேரே குறி வைத்தான் கர்ணன்.

அப்போது அவனுடைய தேர்ப்பாகனாகிய சல்லியன் அவனைத் தடுத்தான். “கர்ணா! நான் சொல்வதைக் கேள், மாயா வினோதனாகிய கண்ணபிரான் அர்ச்சுனனுக்கு அருகில் இருக்கிறான். அவன் ஏதாவது சூழ்ச்சி செய்து உன் அஸ்திரம் அர்ச்சுனனை அணுக முடியாது செய்து விடுவான். ஆகையால் நீ அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத் தொடுக்காதே, அர்ச்சுனனுடைய மார்புக்குக் குறி வைத்து அஸ்திரத்தைத் தொடு”

சல்லியனிடம் தனக்கு அந்தரங்கமாக இருந்த மனஸ்தாபங்களை உத்தேசித்து கர்ணன் அவனுடைய எச்சரிக்கையைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை தான் முதலில் தீர்மானித்திருந்தபடியே அர்ச்சுனனுடைய கழுத்துக்குக் குறி வைத்துத்தான் நாகாஸ்திரத்தைச் செலுத்தினான்.

கர்ணன் அர்ச்சுனன் கழுத்தை நோக்கி நாகாஸ்திரத்தைச் செலுத்துவதைக் கண்ணன் பார்த்துக் கொண்டுவிட்டான். அந்த நாகாஸ்திரத்தை அப்படியே விட்டுவிட்டால் அது அர்ச்சுனனைக் கொன்று முடித்துவிடும் என்பதும் அவனுக்குத் தெரியும். பார்த்தான் கண்ணன். ஒரே ஒரு விநாடி ஆழ்ந்து சிந்தித்தான். பின்பு ஒரு தந்திரம் செய்தான். நாகாஸ்திரம் அர்ச்சுனனுடைய கழுத்தை நெருங்குவதற்கு முன்பே தேர்ச் சக்கரங்களை பன்னிரண்டு விரற்கடை ஆழம் கீழே பூமியில் பதிந்துவிடும்படி அழுத்தினான். இதனால்