பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

405

போரிடுவதற்கு வந்தான். இருவரும் வயதில் ஏறக்குறையச் சமநிலையினரேயானாலும் வீரத்தில் ஏற்றத்தாழ்வுடையவர்களே. அபிமன்னனுடைய வீரம் மலை என்றால் இலக்கணகுமரனுடைய வீரம் மடு. இருவரும் போர் செய்து கொண்டிருக்கும்போதே போர் முறையை மீறி மறைமுகமாக அம்பு செலுத்தி அபிமன்னனுடைய வில்லை முறித்து விட்டான். அபிமன்னனுக்கு இலக்கணகுமாரன் மேல் அடக்க முடியாத கோபம் வந்து விட்டது. முறிந்து போன தனது வில் தண்டினால் இலக்கண குமாரனை அடி அடி என்று அடித்துக் குடுமியைப் பிடித்து இழுத்துத் தனது தேரில் கட்டி இழுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான் அபிமன்னன்.

இவ்வாறு இலக்கணகுமாரனை அபிமன்னன் தேரில் இழுத்து வைத்துக் கட்டிச் சிறை செய்து கொண்டு போவதைத் துரியோதனாதியர்கள் பக்கத்தைச் சேர்ந்த சயத்திரதன் என்பவன் பார்த்து விட்டான். உடனே அவன் வில்லும் கையுமாக வந்து அபிமன்னனுடைய தேரை எதிர்த்து வளைத்துக் கொண்டான். இலக்கண குமாரனைச் சிறைபடுத்திக் கொண்டு போக முடியாதபடி சயத்திரதன் அபிமன்னனை எதிர்த்துப் போர் புரிந்தான். அபிமன்னனும் சயத்திரதன் மேல் அம்புகளைப் பொழிந்தான். தேர்மேல் மரச்சட்டத்தில் கட்டப்பட்டிருந்த இலக்கண குமாரன் ஒன்றும் புரியாமல் மிரள மிரள விழித்துக் கொண்டிருந்தான். சயத்திரதனால் அபிமன்னனை வெல்ல முடியவில்லை. ‘அபிமன்னனை எப்படி மடக்குவது?, என்று விளங்காமல் மலைத்துப் போய்ப் போர்களத்தில் நின்றான். அவன் இவ்வாறு அபிமன்னனுக்கு முன்னால் மலைத்து நிற்பதைக் கர்ணன் கண்டு கொண்டான். உடனே வில்லை வளைத்துக் கொண்டு கர்ணன் சத்திரதனுக்கு உதவியாக வந்து அபிமன்னனை எதிர்த்தான். கர்ணனைப் போலவே கெளரவ சேனையைச் சேர்ந்த வேறு பல அரசர்களும் திடுதிடுவென்று ஓடி வந்தனர். தனியாக நின்ற அபிமன்னன் பகையரசர்களின் பெருங்கூட்டத்துக்கு நடுவே சிக்கிக்