பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

191


துச்சாதனன் எழுந்து திரெளபதியை நோக்கிப் பாய்ந்தான். வேட்டைப் பொருளின் மேல் பாயும் மிருக வெறி அந்தப் பாய்ச்சலில் இருந்தது.

திரெளபதியின் உடலில் மீண்டும் நடுக்கம் தோன்றியது. ‘மானத்தைக் காத்தளித்த கண்ணபிரான், இப்போது காத்து கருணை செய்ய மாட்டானா?’ என்று கலங்கினாள். அக்கிரமத்தை எண்ணிக் கலங்கிய அவள் உள்ளத்தில் சினமும் தோன்றியது. சினம் வெறியாக மாறியது. வீமன் முழங்கியது போல அவள் முழங்கத் தொடங்கிவிட்டாள். அந்த முழக்கத்தைக் கேட்ட துச்சாதனன் இடியோசை கேட்ட நாகம் போல அவளை நெருங்குவதற்கு அஞ்சி அப்படியே நின்ற இடத்தில் பதுங்கி நின்றான்.

“வெட்கமில்லாமல் என்னைத் தன் தொடையிலே வந்து உட்காரும்படி அழைக்கிறான் இந்த அரசன். என்னை உட்காரச் சொல்லிய இவன் தொடையைக் கூரிய அலகுகளைக் கொண்ட பறவைகள் குத்திக் கிழித்துக் குலைப்பனவாகுக! என் சொல் வீண் போகாது. ஒரு நாள் இந்தத் தொடைக்கு அத்தகைய கதி நேரிடத்தான் போகிறது. இவன் நாசத்தை அடையத்தான் போகிறான். இந்தப் பேரவையிலே இன்று கூடியிருக்கும் சான்றோர்களுக்கு முன்னே நான் செய்கின்ற சபதம் ஒன்று உண்டு. பெரியோர்களே கேட்பீர்களாக, பலர் கூடியிருக்கும் இந்தப் பேரவைக்கு இழுத்து வரப்பட்டேன் நான். என்னுடைய கூந்தலையும் சேலையையும் மற்றொருவன் தொட்டு இழுக்கும்படியான அவமானத்தையும் இன்று அடைந்தேன். இவைகளுக்கு எல்லாம் காரணமாக இருந்தவன் இதோ இந்த அவைக்குத் தலைவனாக வீற்றிருக்கும் கொடிய அரசனே ஆவான். இவனைச் சரியானபடி பழி வாங்காமல் விட மாட்டேன்.

என் கணவன்மார்களால் போர்க்களத்தில் இவனைக் கொல்லச் செய்து இவன் தொடையினின்று பீறிட்டெழும்