பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

247

முன்பிருந்த கிளையில் போய்ப் பொருந்திக் கொண்டாலும் பொருந்திக் கொள்ளும். அதைச் செய்யுங்கள்” -என்றான் கண்ணபிரான். பாண்டவர்களும் திரெளபதியும் கண்ணபிரானும் நெல்லிக்கனியை எடுத்துக் கொண்டு மரத்தடிக்குச் சென்றனர். கனியைக் கீழே வைத்துவிட்டு அவரவர்களுடைய மனத்தில் இருந்ததைச் சத்தியத்திற்குப் புறம்பாகாதபடி கூறலாயினர்.

“சத்தியமும் மெய்ம்மையுமே உலகில் நிலைத்து வாழக்கூடியவை. மற்றவை எல்லாம் அழிவனவே” என்றான் தருமன்.

“பிறன் மனைவியை விரும்பல் பெருந்தீமை. பிறரை வருத்தாமல் அவர்க்கு உதவுவது பண்பு” என்றான் வீமன்.

“மானத்தைக் காப்பது தான் வாழ்வு. உடல், உயிர் எல்லாம் அழிந்தாலும் அழியவிடக்கூடாதது மானம்” -என்றான் அர்ச்சுனன்.

“உலகில் மதிக்கத்தக்க பொருள் கலைகளாலும் கல்வியாலும் ஏற்படக்கூடிய ஞானமே” -என்றான் நகுலன்.

“சத்தியத்தைத் தாயாகவும், அறிவைத் தந்தையாகவும் தருமத்தைச் சகோதரனாகவும், சாந்தத்தை மனைவியாகவும், பொறுமையைப் புதல்வனாகவும் கொண்டு வாழ்வதே வாழ்வென்று கருதுகின்றேன் நான்” -என்றான் சகாதேவன்

“பெண்ணுக்கு ஆடவர்களின் மேல் ஏற்படக்கூடிய ஆசை அடக்க முடியாதது. எல்லாத் தகுதியும் பெற்ற பாண்டவர்கள் கணவராக வாய்த்தும் என் மனம் வேறொருவனை அடிக்கடி நாடுகிறது. மங்கையர்கள் கற்பு, கணவனாக அமைபவனைப் பொறுத்ததாகும். அது ஒரு உறுதியான பண்பென்று தோன்றவில்லை” என்று திரெளபதி தன் உள்ளத்தில் இருந்ததை மறைக்காமல் கூறினாள்.

இவர்கள் ஆறு பேரும் இவ்வாறு கூறி முடித்தபோது தரையில் இருந்த நெல்லிக் கனியைக் காணவில்லை.