பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

242

அறத்தின் குரல்


“ஆம்! அதுவே சரியான வழி, கண்ணபிரானின் உதவியைப் பெறுவதற்கு அவனைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமும் கூட நமக்குக் கிடையாது, நாம் இருந்த இடத்திலிருந்தே மனத்திலே எண்ணினால் போதும். நமக்கு உதவ வந்து விடுவான் அவன்.” சகாதேவன் அதை ஆமோதித்தான்.

சகோதரர்கள் இவ்வாறு சிந்தனையில் ஈடுபட்டிருந்த போது வாட்டம் நிறைந்த முகத்தோடு திரெளபதி அங்கு வந்தாள். “இதோ! முனிவர் நீராடி விட்டு வந்து விடப் போகிறார். என்ன செய்யலாம்?” என்றாள். உடனே தருமன் நகுல சகாதேவர்களின் யோசனைப்படிக் கண்ணனை எண்ணி மனத்தில் தியானம் செய்தான். சிறிது நேரத்தில் எல்லாம் வல்ல மாயவனாகிய கண்ணபிரான் பாண்டவர்களுக்கு முன் தோன்றினான். ஐவரும் திரெளபதியும் அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்போது தாங்கள் துருவாசருக்கு உணவு படைக்க இயலாது திகைத்திருக்கும் நிலையைக் கூறி வழி காட்டுமாறு வேண்டிக் கொண்டனர். எல்லாம் அறிந்தும் ஒன்றும் அறியாதவனைப் போலச் சிரித்துக் கொண்டே நின்ற அந்தப் பெருமான் அவர்கள் துன்பத்தை அப்போது தான் அறிந்து கொண்டவனைப் போல நடித்தான்.

“திரெளபதி! கதிரவன் உனக்கு அளித்திருக்கும் அக்ஷய பாத்திரத்தை இங்கே கொண்டு வா” என்று வேண்டினார் கண்ணபிரான். திரெளபதி கழுவிக் கவிழ்த்திருந்த அக்ஷய பாத்திரத்தைக் கொண்டு வந்தாள். “நன்றாகப் பாத்திரத்தைப் பார்! அதில் ஏதாவது ஒட்டிக் கொண்டிருக்கிறதோ?” திரெளபதி பார்த்தாள். ஒரே ஒரு சோற்றுப் பருக்கை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை அப்படியே கண்ணனுக்கருகில் கொண்டு போய்க் காண்பித்தாள். கண்ணன் அந்த ஒரே ஒரு பருக்கையைக் கொடுக்குமாறு வாங்கிச் சாப்பிட்டான். திரெளபதியும் பாண்டவர்களும் கண்ணனின் அந்தச் செயலுக்குக் காரணம் புரியாமல் அவனை ஏறிட்டுப் பார்த்தனர்.