பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

519

விளைவு முற்றிலும் மாறிவிட்டது. கழுத்தை நோக்கி வந்த நாகாஸ்திரம் குறி தவறி அர்ச்சுனனுடைய கிரீடத்தை உருட்டித் தள்ளியதோடு போயிற்று.

இதனால் கர்ணன் பெரிதும் ஏமாற்றம் அடைந்தான். அப்போதே சல்லியன் சொன்னபடி கேட்டு மார்புக்குக் குறி வைத்திருந்தால் தேர் கீழே அழுத்தினாலும் கழுத்தையாவது தாக்கியிருக்குமே! கேட்காமல் அலட்சியம் செய்து தோற்று விட்டோமே என்று மனம் குமுறினான் கர்ணன். நாகாஸ்திரம் தன் முடியை இடறிக்கொண்டு விழுந்த உடனேயே அதன் மேல் வேறு ஓர் அம்பை எய்து அதை இரு கூறாக்கினான் அர்ச்சுனன் . ஆனால் எப்படியும் அர்ச்சுனனைப் பழிவாங்கியே தீருவது என்று பிடிவாதத்தோடு இருந்த அந்தப் பாம்பு திரும்பவும் கர்ணனிடம் சென்று, “கர்ணா! இன்னொரு முறை என்னை அர்ச்சுனன் மேல் ஏவு! நான் இம்முறை கட்டாயம் அவனைக் கொன்று தீர்த்து விடுகிறேன்” என்று வேண்டிக் கொண்டது. ஆனால் கர்ணன் அதனுடைய வேண்டுகோளுக்கு இணங்கவில்லை. “ஒரு முறைக்கு மேல் உன்னை அர்ச்சுனனிடம் ஏவமாட்டேன் என்று நான் குந்திக்கு வரம் கொடுத்திருக்கிறேன். ஆகையால் இனி உன்னை ஏவமுடியாது, நீ சென்று வரலாம்” என்று கூறி மறுத்துவிட்டான் கர்ணன். மனவேதனையுற்ற நாகாஸ்திரம் அப்பொழுதே அழிந்து மாண்டது.

கர்ணனிடம் நாகாஸ்திரத்துக்கு ஆளாகாமல் அர்ச்சுனன் பிழைத்துவிட்ட செய்தி தருமன், வீமன் முதலிய சகோதரர்களுக்கும் பாண்டவ சைனியங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. சல்லியன் கர்ணனை இகழ்ந்து பேசத் தொடங்கினான்.

“அப்பொழுதே நான் கூறினேனே, நீ கேட்டாயா? மார்புக்குக் குறி வைத்திருந்தால் இப்பொழுது அர்ச்சுனன் பிழைத்திருக்க முடியுமா? மற்றவர்களுடைய சொற்களுக்கு மதிப்புக் கொடுக்காத அறிவிலி நீ. உன் போன்றவனுக்கு