பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/552

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

550

அறத்தின் குரல்

தொடையில் தான் இருக்கிறது என்று வீமனுக்குப் புரிந்துவிட்டது.

3. எல்லாம் முடிந்து விட்டது

துரியோதனனுடைய உயிர்நிலை எங்கிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன், ‘இனி இவனை அழிப்பது கடினமில்லை’ என்று தோன்றியது வீமனுக்கு. உடனே தன் வலிமையை எல்லாம் ஒன்று திரட்டிக் கதையை ஓங்கித் துரியோதனனின் தொடையில் அடித்தான். பலமாக விழுந்த அந்த அடியைத் தாங்க முடியாமல் தலைகிறங்கிச் சோர்ந்து அலறிக் கொண்டே கீழே வீழ்ந்தான் துரியோதனன். அவன் கீழே விழுந்த பின்பும் வீமனுடைய சினம் அடங்கவில்லை. மார்பில் ஓங்கிக் குத்தினான். கன்னங்களில் அறைந்து பற்கள் சிதறி வாயிலிருந்து இரத்தம் ஒழுகுமாறு செய்தான். துரியோதனன் சிரசில் அணிந்து கொண்டிருந்த பொற்கிரீடம் உருண்டு மண்ணில் புதைந்தது. தோள்களிலும், மார்பிலுமாக வீமனிடமிருந்து துரியோதனன் வாங்கிக் கொண்ட அடிகள் கணக்கு வழக்கிற்கு அடங்காதவை. கடித்துக் குதறி எறியப்பட்ட மாமிசப்பிண்டம் போலத் தரையில் கிடந்தது துரியோதனனின் உடல், “ஏ கண்ணா! நீ சூழ்ச்சிக்காரன். நீ செய்ததெல்லாம் எனக்குத் தெரியும். அர்ச்சுனன் மூலமாக என் உயிர் நிலை எது என்பதை நீ குறிப்பாக வீமனுக்குத் தெரியப்படுத்திவிட்டாய். இல்லையானால் வீமன் இப்படி என்னை நொறுக்கித் தள்ளுவானா? ஆனால் உன்னுடைய இந்தச் செயல் பெரிய வஞ்சகம். நேர்மையான போர் முறை ஆகாது இது. நீ ஓர் இடையன், பெருந்தன்மை இல்லாதவன். ஆகவேதான் நீ இப்படிப்பட்ட கேவலமான செயலைச் செய்தாய், பரம்பரை அரச குலத்தில் பிறந்தவர்கள் இந்தக் காரியத்தைச் செய்யக் கூசுவார்கள்” என்று வேதனைமிக்க குரலில் கதறினான் துரியோதனன். அடிபட்டு இரணமாகியிருந்த உடலின் வலி வேதனை அவன் குரலில் தொனித்தது.