பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

261

மனையைச் சேர்ந்த குதிரைச் சாலையின் வாயிலில் நின்று கொண்டிருந்தான். அப்போது தற்செயலாகக் குதிரைச் சாலையைப் பார்வையிடுவதற்காக அங்கே வந்த விராட மன்னன் அவனைக் கண்டான். கையில் கடிவாளம் முதலிய குதிரை சம்பந்தமான பொருள்களை வைத்துக் கொண்டிருந்ததால் நின்று கொண்டிருப்பவன் அசுவ சாஸ்திரத்தில் (குதிரையைப் பற்றி கலைகளில் திறமை மிக்கவனாக இருக்க வேண்டும் என்று அனுமானித்துக் கொண்டான்.

“நீ எங்கிருந்து வருகிறாய் அப்பா? குதிரைகளைப் பழக்குவதில் நீ தேர்ச்சியுள்ளவன் போலும்!”

“அடியேனைத் தாமக்கிரந்தி என்று அழைப்பார்கள். அசுவ சாஸ்திரத்தின் இருப்பிடமாகிய நகுலனிடம் பல ஆண்டுகள் உடனிருந்து தொழில் கற்றேன். நகுலன் காட்டுக்குச் சென்றபின் ஆதரவிழந்து எங்கெங்கோ சுற்றினேன். இப்போது தங்களுடைய கலைஞரை ஆதரிக்கும் பண்பு கேட்டு இங்கு வந்தேன்.”

“மிகவும் மகிழ்ச்சி அப்பா! உன்னைப் போன்ற ஒரு தலைவனைத்தான் என்னுடைய குதிரைச் சாலையின் பொறுப்பு முழுவதையும் ஒப்படைப்பதற்காக நான் தேடிக் கொண்டிருந்தேன். இன்றிலிருந்து நீ அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்” மகிழ்ச்சியும் நன்றியும் ஒருங்கே பொங்கும் உள்ளத்தோடு நகுலன் அந்தப் பதவியை ஏற்று ‘தாமக்கிரந்தி’ என்ற பெயருள் ஒளிந்து கொண்டான்.

அடுத்து சகாதேவன் வந்தான். பசுக்களை மேய்த்துப் பாதுகாக்கும் கோவலர் வகுப்பைச் சேர்ந்தவனைப் போல மாறுவேடமிட்டுக் கொண்டிருந்தான். அவன் பெயரையும் மாற்றித் ‘தந்திரி பாலன்’ -என்று வைத்துக் கொண்டான். விராடராசனிடம் சென்று, “யான் பசுக்களைப் பரிபாலனம் பண்ணுவதில் வல்லவன். முன்பு பாண்டவர்கள் அரசாண்ட பொழுது சகாதேவனுக்குக் கீழே பசுக்களைப் பாதுக்காப்பவனாகப் பணிபுரிந்து அனுபவமும் தேர்ச்சியும்