பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

450

அறத்தின் குரல்

இவனோடு பேச வேண்டாம்” -இவ்வாறு துரியோதனன் அரக்கர்கள் குலத்தையும் அதில் பிறந்த தன்னையும் இழிவு படுத்திப் பேசியதைக் கேட்டவுடன் கடோற்கசனுக்கு முன்னிலுமதிகமாகச் சினம் வந்து விட்டது. அவன் துரியோதனனை நோக்கி ஆத்திரத்தோடு பேசலானான்.

“நாங்கள் அரக்கர்கள்தான். ஆனால் எங்களுக்கு வஞ்சகம் செய்யத் தெரியாது. சகோதரர்களுக்கு நஞ்சு கொடுத்துக் கொல்லவோ, அரக்கு மாளிகையில் தீமூட்டிக் கொல்லவோ தெரியாது. நீராட அழைத்துப் போய்ச் சகோதரர்களைக் கழுக்கல் நட்டுக் கொல்வதற்கு முயல மாட்டோம். ஒருவர் செய்த நன்றியை எக்காலத்திலும் மறக்க மாட்டோம். நீதி நியாயங்களை மறந்து வஞ்சகமாகச் சூதாடி வேண்டியவர்களது உடைமைகளைப் பறித்துக் கொள்ள மாட்டோம். பிறன் மனைவியை அவை நடுவில் மானபங்கம் செய்யக் கனவிலும் நினைக்க மாட்டோம். வீரமில்லாத கோழைகளைப் போலப் போரில் புறமுதுகு காட்டி ஓடமாட்டோம். நான் மேலே கூறிய இந்தக் கொடுஞ்செயல்களெல்லாம் உனக்கே உரிமையுடையவை. நினைவு வைத்துக் கொள். நீயும் கர்ணனும் செய்திருக்கும் சபதங்கள் பயனற்றவை. அர்ச்சுனனை வெல்வதாக நீங்கள் எண்ணுவது வெறுங்கனவு. அந்த மகாவீரனை எதிர்த்துப் போர் செய்யக்கூடியவர்கள் இந்த விநாடி வரை பிறக்கவில்லை. மனிதர்களில் மட்டுமல்ல, தேவர்களிலும் பிறக்கவில்லை. நாளைப் போரில் உங்கள் சத்திரதன் அழிவது உறுதி. சந்தேகமிருந்தால் நாளைக்கு பாருங்கள்” என்று கூறி விட்டு அங்கிருந்த எவருடைய மறுமொழியையும் எதிர்ப்பார்க்காமல் கிளம்பினான் கடோற்கசன்.

அவன் சென்றபின் துரியோதனாதியர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். துரோணர், சகுனி, கர்ணன் முதலியவர்கள் துரியோதனனுக்கு எதிரே உட்கார்ந்து கொண்டிருந்தனர். துரியோதனன் அவர்களைப் பார்த்து, எப்பாடுபட்டாவது நாளைக்கு ஒருநாள் மட்டும்