பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அறத்தின் குரல்

என்பதை அறிந்ததும் அறியாதவனைப் போலச் சாப்பாட்டி லேயே கவனமாக ஈடுபட்டிருந்தான்.

“புலிக்கு வந்த உணவைக் கேவலம் ஒரு பூனை தின்று கொண்டிருக்கிறது. இந்தப் பகாசுரன் யார் என்பதை அந்தப் பூனைக்குப் புரிய வைக்கிறேன்” -பகாசுரன் கர்ஜித்துக் கொண்டே வண்டியை நெருங்கினான். அடுத்த விநாடி உண்டு கொண்டிருந்த வீமனுடைய முதுகிலும் பிடரியிலும் விண்விண்ணென்று சரமாரியாகக் குத்துக்கள் விழுந்தன. வீமனோ அந்தக் குத்துக்களைச் சிறிதும் பொருட்படுத்தாது வண்டியில் கொஞ்சநஞ்சம் எஞ்சியிருந்த சோற்றையும் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தான். சோறு தொண்டையிலே விக்கிக் கொள்ளாமல் முதுகிலே மென்மையாகத் தட்டிக் கொடுத்தது போலிருந்த பகாசுரனின் குத்துக்கள். வண்டியிலுள்ள எல்லா உணவுப் பொருட்களையும் சாப்பாட்டு முடிந்தபின் மலை எழுந்திருப்பது போல ஏப்பம் விட்டுக் கொண்டே எழுந்திருந்து பகாசுரன் மேல் பாய்ந்தான் வீமன்.

“நீ அரக்கன். நான் வெறும் மனிதனே. போரில் என்னை வெல்ல முடியுமானால் தைரியமாகப் போர் செய்! இடும்பனுக்கு ஏற்படுத்திய இறுதி முடிவையே உனக்கும் ஏற்படுத்துகின்றேன்” - வீமன் சிங்க ஏறு போல் முழங்கிக் கொண்டே கைகளைப் புடைத்தான். இருவரும் கைகலந்தனர். குன்றோடு குன்று கட்டிப் புரள்வது போலப் போர் நடந்தது. திடீரென்று அருகிலிருந்த மரக்கிளை ஒன்றை முறித்துக் கொண்டு வீமனை அடிக்கப் பாய்ந்து வந்தான் பகாசுரன். அதே வேகத்தில் வீமனும் ஒரு மரக்கிளையை முறித்துக் கொண்டு அதை எதிர்த்தான். பகாசுரன் கீழே கிடந்த பாறைக் கற்களை வீமன் மேல் உருட்டிவிட்டு நசுக்குவதற்கு முயன்றபோது, வீமனும் கற்களை உருட்ட முற்பட்டான். எந்த வகையிலும் அரக்கனால் அடக்கிவிட முடியாததாக இருந்தது வீமனுடைய போரும் வீரமும் அசுரனுக்கு அது பசி வேளை. உடல் சோர்ந்து தள்ளாடியது. ஆனாலும் தன்