பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/535

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

533

கதாயுதத்தோடு தேரிலிருந்து கீழே குதித்தான். சல்லியனுடைய தேரை நெருங்கிக் கதையால் அடித்து நொறுக்கலானான். ‘சல்லியன் இந்தத் திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்க வில்லையாகையினால் வீமனை எதிர்த்துச் சமாளிக்க முடியாமல் திணறினான். சல்லியனுடைய தேர்ப்பாகன், குதிரைகள், தேர்ச் சக்கரங்கள் ஆகியவை எல்லாம் வீமனுடைய கதைக்கு இலக்காகி அடிபட்டு நொறுங்கின.

கதாயுதத்தைவிடப் பெரிய ‘கோமரம்’ என்னும் ஆயுதத்தை ஓங்கிக்கொண்டு வீமன் மேல் பாய்ந்தான் சல்லியன். வீமன் சல்லியனை எதிர்ப்பதற்குள் சல்லியனுடைய கோமரம் வீமன் நெற்றியில் விழுந்தது. அந்தப் பலமான அடி வீமனை ஒருகணம் பொறிகலங்கச் செய்துவிட்டது. ஆனால் அந்தக் கலக்கம் ஒருகணம்தான் நீடித்தது. மறுகணமே தன்னைச் சமாளித்துக் கொண்டு மேலும் போரில் ஈடுபட்டான் அவன். சல்லியனும் வீமனும் போர் செய்ததைப் போலவே அவரவர் கட்சியைச் சேர்ந்த படைவீரர்களும் தனித்தனியே போர் புரிந்தனர். இறுதி நிலையில் இவருக்குத் தான் வெற்றி, இவருக்குத்தான் தோல்வி, என்று கண்டு கொள்ள முடியாதபடி கடுமையாக முற்றியிருந்தது போர்.

போர் என்றால் வெற்றி தோல்விகளைப் போலவே உயிர் பிழைப்பதும், உயிர் இழப்பதும் கூட இயற்கையாக நேரக்கூடியவையே! நகுலனை எதிர்த்து கர்ணனின் புதல்வர்களான சித்திரசேனன், சூரியவர்மன், சித்திர தீர்த்தி என்ற இளைஞர்கள் மூவரும் தாக்குதல் நடத்தினர். நகுலனுடைய அனுபவம் மிகுந்த வீரத்துக்கு முன்னால் இந்தச் சிறுபிள்ளைகள் எவ்வளவு நேரம்தான் நிலைத்து நிற்க முடியும்? பாவம்! கால் நாழிகைப் போரிலேயே இந்த மூவரையும் கொன்று முடித்துவிட்டான் நகுலன், உலூகன், சைந்தவன் என்ற தன் பிள்ளைகள் புடைசூழச் சகுனி நகுலனை எதிர்ப்பதற்கு ஓடி வந்தான். ஆனால் நகுலன் செய்த சண்டமாருதப் போரை எதிர்த்து நிற்க முடியாமல் உடனே புறமுதுகு காட்டி ஓடிவிட்டனர் அவர்கள். துரியோதனாதியர்