பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

195


துச்சாதனன், கர்ணன் முதலிய தன் கூட்டத்தவர்களைக் கலந்து ஆலோசித்தபோது, அவர்களும் இதையே வரவேற்றனர். பாண்டவர்களை அழித்தொழிக்கின்ற எண்ணமே அவர்கள் மனங்களில் முற்றி கன்றிப் போயிருந்தது. மூவரும் கலந்து ஆலோசித்த பின்னர் அவையினருக்குக் கூறவேண்டிய செய்திகளைத் துச்சாதனன் கூறத் தொடங்கினான்.

“தருமா! எங்கள் தந்தை கூறுவது போல உன் உடமைகளைத் திரும்ப அளித்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டு உங்களை நாட்டிற்கு அனுப்ப நாங்கள் தயாராயில்லை. நிச்சயமாக எங்களால் அப்படிச் செய்ய முடியாது. வேண்டுமானால் ஒரேயொரு விதத்தில் உங்களுக்குக் கருணைக் காட்டுகிறோம். நீங்களும் உங்கள் மனைவி திரெளபதியும் இப்போதுள்ள நிலையில் எங்களுக்கு அடிமைகள். எங்கள் தந்தையின் மனத்திருப்திக்காக உங்கள் ஐவருக்கும் திரெளபதிக்கும் இந்த அடிமைத்தனத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கிறோம். நீங்கள் இங்கிருந்து விடுதலைப் பெற்றுச் சுதந்திரமாகச் செல்லலாம். எங்காவது காடு மலைகளில் மறைந்து வாழலாம்.” -துச்சாதனனின் இந்தச் சொற்களை எதிர்த்துப் பேசும் ஆற்றல் துரியோதனாதியர்களுக்குத் தந்தையாகிய திருதராட்டிரனுக்குக்கூட இல்லாமல் போய்விட்டது. வீட்டுமன், விதுரன் முதலியவர்களைத் தனியே அழைத்துச் சென்று திருதராட்டிரனும் ஆலோசித்துப் பார்த்தான். வேறெந்த வழியும் அவனுக்குப் புலப்படவில்லை.

முடிவில் தருமனிடம் சென்று, “அப்பா! துரியோத னாதியர்கள் என் மக்கள் எனினும் பிடிவாதக்காரர்கள். நான் இனி எது கூறினாலும் கேட்கமாட்டார்கள். ஆகவே நீ அவர்கள் கூறியபடியே செய்வது தான் நல்லது என்று கூறிவிட்டான். உடனே துரோணர் உரிமையோடும் அன்போடும் பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.