பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

496

அறத்தின் குரல்

சாரதியாக அமரச் சொல்கிறாயே! நாக்குக் கூசாமல் இச்சொற்களைக் கூறி நீ எவ்வாறு எனக்கு இந்தக் கட்டளையை இட்டாய்?”

சல்லியனின் திடீர் மனமாற்றத்தைக் கண்டு துரியோதனன் திடுக்கிட்டான் மனத்திற்கு இதமான சொற்களைக் கூறி அவனைச் சமாதானப்படுத்த எண்ணினான். துரியோதனன் உடனே மீண்டும் சல்லியனை அருகில் அழைத்துக் கூறலானான். “சல்லியா! நான் கூறியதைத் தவறாகப் புரிந்து கொண்டு ஆத்திரப்படாதே. உன்னை அவமானப்படுத்த வேண்டுமென்பதற்காக உனக்கு நான் இந்தக் கட்டளையை இடவில்லை. உன்னுடைய திறமையையும், தகுதியையும், உணர்ந்து கொண்டுதான் உனக்குப் பெருமை அளிக்கத் தக்க விதத்தில் இந்தக் கட்டளையை இடுகின்றேன், சர்வேசுவரனாகிய ஸ்ரீ கண்ணபிரான் தனக்கு அடங்கிய ஒரு சிறு வீரனான அர்ச்சுனனுக்குத் தேரோட்டியாக இருக்க வில்லையா? வீரமும் ஆண்மையுமில்லாத உத்தரகுமாரனுக்கு மகாவீரனான அர்ச்சுனன் தேரோட்டியாக இருக்கவில்லையா? அதனாலெல்லாம் அவர்களுக்கு அவமானமா ஏற்பட்டு விட்டது? இந்தத் துன்பம் நிறைந்த சூழ்நிலையில் உன்னைத் தவிர வேறு யார் தேரோட்டியாக இருந்தாலும் கெளரவர்களுக்கு வெற்றி கிட்டாது என்ற பெரிய நம்பிக்கையோடு உன்னை அன்புடன் வேண்டிக் கொள்கிறேன், மறுக்காமல் ஏற்றுக்கொள்.”

துரியோதனன் சோகம் ததும்பி நிற்கும் சொற்களால் உருக்கமாக வேண்டிக் கொண்ட வேண்டுகோள் சல்லியனுடைய சினத்தையும் மனத்தையும் ஒருங்கு நெகிழச் செய்தது. கர்ணனுக்குத் தேர் ஓட்டுவதற்குத் தான் முழு மனத்தோடு இணங்குவதாக அறிவித்தான் சல்லியன். துரியோதனருக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. சல்லியனுடைய சம்மதம் கெளரவ சேனையில் யாவருக்குமே மகிழ்ச்சி அளித்தது.