பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/416

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

414

அறத்தின் குரல்

அபிமன்னன் ஆகியோர் ஒன்று சேர்ந்து துரோணரைப் போர்க்களத்திலேயே நிற்கமுடியாதபடி துரத்தி அடித்தார்கள். கெளரவசேனையில் இறந்தவர்களைத் தவிர இருந்தவர்கள் யாவரும் உயிர் பிழைத்தால் போதுமென்ற எண்ணத்துடன் பாசறைகளை நோக்கி ஓடிவிட்டனர். களத்தில் படை தரித்து நிற்கவே இல்லை. பயம்தான் அவர்கள் இதயத்தில் நிலைத்து நின்றது. அவற்றை எல்லாம் கண்டபோது துரியோதனனுடைய மனத்தில் ஏற்பட்ட தாழ்மை உணர்ச்சிக்கும் அவமானத்திற்கும் ஓர் அளவே இல்லை, வெறுப்பினாலும் அவமானத்தினாலும் ஏற்பட்ட ஒரு வகை விரக்தி அவன் மனத்தில் வளர்ந்து கொண்டிருந்தது. “நாம் அசடர்கள்! நாம் முட்டாள்கள்! என்றைக்கும் நம்மால் பாண்டவர்களை வெல்ல முடியாது. அவர்கள் வீரதீரர்கள்! இந்த உலகமும் இதன் ஆட்சி உரிமையும் வெற்றியும், வீரமும் ஆகிய சகலமும் அவர்களுக்குத் தான் சொந்தம்” என்று விரக்தியோடு தன்னைச் சுற்றி இருந்தவர்களை நோக்கிக் கூறினான் துரியோதனன். பலர் உறுதியும் உரமும் தோன்றப் பேசி அவனுடைய மனத்தின் விரக்தி நீங்குமாறு செய்ய முயன்றனர்.

இதன் பயனாக மீண்டும் துரோணர், துரியோதனன் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் படையைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டு தருமன் இருந்த இடத்திற்கு வந்தனர். அங்கே வில்லை வளைத்துக் கொண்டு இவர்களை எதிர்ப்பதற்குத் தயாராக நின்றான் அபிமன்னன். துரியோதனனும் அவன் படைகளும் தருமனை நெருங்குவதற்கு முன்பே அபிமன்னன் செலுத்திய கூரிய கணைகள் அவர்களைத் தடுத்து நிறுத்தின. தருமன், கடோற்கசன், துட்டத்துய்ம்மன் முதலியவர்களும், போர் புரியவே துரியோதனனுடைய இந்த மூன்றாவது முயற்சியும் வலுவிழந்து போயிற்று. தருமனின் தரப்பார் சரியான முன்னேற்பாட்டுடன் தாக்குதலைச் சமாளித்து விட்டதனால் துரியோதனன் வந்த வழியே படைகளுடன் திரும்பி ஓட வேண்டியதாயிற்று. துரோணருக்கும் அதே கதிதான்