பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

524

அறத்தின் குரல்

செலுத்தினான். நல்வினைகளையெல்லாம் இழந்து சாதாரண மனிதப் பிறவியாகத் தளர்ந்து ஒடுங்கித் தேரின் மேல் நின்றுகொண்டிருந்த கர்ணன் மார்பிலே பாய்ந்து அவனைக் கீழே தள்ளியது அந்த அஸ்திரம். உயிர் தளர்ந்து பிரியும் வேதனையோடு கீழே விழுந்து நெருப்பில் அகப்பட்ட மலர் போலத் துடிதுடித்தது அவன் உடல் துரியோதனனுக்கும் அவன் படைகளுக்கும் பெருமையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு மகாவீரன் அந்த விசாலமான போர்க்களத்தில் கேட்பாரில்லாமல் தன்னந்தனியே வீழ்ந்து இறந்து கொண்டிருந்தான். அவனுடைய உடலிலிருந்து உயிர் அணு அணுவாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. ஒளி மெல்ல மெல்ல ஒடுங்கியது.

6. துயர அமைதி

இன்னதென்று புரிய முடியாத உணர்வுகளால் அலைமோதிக் கொண்டிருந்த குந்தியின் மனத்தில் இனம் புலப்படாத சோக இருள் சூழ்ந்தது. வலக்கண்ணும் தோளும் புருவமும் தீய நிமித்தமாகத் துடித்தன. உடல் காரணமின்றி நடுங்கியது. ‘உன் மகன் கர்ணன் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறான்’ என்று ஏதோ உருவமற்ற தெளிவிழந்த குரல் ஒன்று இடைவிடாமல் அவள் செவிகளில் ஒலித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. அவள் பயந்தாள். அவளுடைய மனமும் எண்ணங்களும் குழம்பி நடுங்கின. பதறியடித்துக் கொண்டு போர்க்களத்துக்கு ஓடினாள். அவளுடைய கால்களைக் காட்டிலும் படுவேகமாக மனம் அங்கு ஓடியது. அங்கே சென்றதும் சற்று முன் அவள் எதைப் ‘பிரமை’ என்று எண்ணினாளோ, அதுவே உண்மையாக நடந்திருந்தது!

ஆம்! கர்ணன் குருதி வெள்ளத்தில் இடையே வீழ்ந்து கொண்டிருந்தான். குந்தி அவனை அந்த நிலையில் கண்டு ஓவென்று கதறியழுது புலம்பினாள். தளர்ந்து உணர்விழந்து