பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

245


“ஐயோ! அர்ச்சுனா; என்ன காரியஞ் செய்து விட்டாய்? இந்த நெல்லிக் கனி மாபெரும் முனிவராகிய அமித்திரர் உண்ணுவதற்கு உரியது அல்லவா? திரெளபதியின் பேச்சைக் கேட்டுத் தீரவிசாரித்துக் கொள்ளாமல் இதை நீ மரத்திலிருந்து வீழ்த்திவிட்டாயே. அமித்திர முனிவர் இப்போது இந்தக் கனி கீழே விழுந்திருப்பதைக் கண்டால் கடுங்கோபம் கொண்டு விடுவாரே, என்றனர். அதனைக் கேட்டு அர்ச்சுனன் என்ன செய்வதென்று தோன்றாமல் திகைத்து வருந்தினான். “எப்படியோ தவறு நேர்ந்து விட்டது, நமக்குப் பயமாயிருக்கிறது. கனியைக் கொண்டுப் போய் தருமனிடம் கொடுத்து என்ன பரிகாரம் தேடலாமென்று ஆலோசிக்கலாம்” என்று கனியுடனும் திரெளபதியுடனும் காட்டில் தாங்கள் வசிக்கும் இடத்துக்குத் திரும்பினான். அர்ச்சுனன் கனியைத் தன் கையில் கொடுத்து நடந்தவற்றைக் கூறியதும் தருமனுக்குச் சினம் தோன்றியது. ஆனால் ஒரே ஒரு கணம் தான் அந்தச் சினம் சினமாக இருந்தது. மறுகணம் அதுவே பொறுமையாக மாறிவிட்டது.

“காட்டில் அனாதைகளைப் போன்று வசிக்கின்ற துன்பம் போதாதென்று இந்தத் துன்பத்தையும் வேறு நீ கொண்டு வந்திருக்கிறாய்!” -என்று அர்ச்சுனனை நோக்கி வேதனைச் சிரிப்போடு கூறினார்.

“நமக்குள் வருந்துவது பின்பு இருக்கட்டும். அமித்திர முனிவர் மரத்தில் கனியைக் காணாமல் சினங்கொண்டு சாபம் கொடுப்பதற்குள் அவரைச் சந்தித்துப் பணிவோடு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடலாம்” என்றான் வீமன்.

“வேண்டாம். என் பொருட்டு எல்லோரும் முனிவரைச் சந்தித்து ஏன் அவருடைய கோபத்துக்கு ஆளாக வேண்டும்? நான் செய்த வினைக்கு நானே சென்று பயனை அனுபவிக்கிறேன்! உங்களுக்கு ஏன் வீணான கஷ்டம்?” என்று அர்ச்சுனன் வெறுப்பினால் தன்னைத்தானே நொந்து கொண்டான்.