பக்கம்:கட்டடமும் கதையும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81


கலைக் கோவில்களில் இதுவும் ஒன்று. கி. பி. 1565 ஆம் ஆண்டு மொகலாயப் பேரரசின் புகழுக்கும் பெருமைக்கும் காரணமாக விளங்கிய அக்பரின் தாயும், உமாயூனின் மனைவியுமான அமிதா பானு பேகத்தினால் இச்சமாதி எழுப்பப்பட்டது. சிற்பக் கலையழகில் தாஜ்மகாலுக்கு அடுத்த நிலையில் வைத்து உமாயூன் சமாதி பேசப்படுகிறது.

இச்சமாதியில் நிலைத்த நம் பார்வையைத் திருப்பினால் பிரோஜ்ஷா கோட்லா தென்படும். அதை அடுத்து ஜும்மா மசூதியின் உச்சிப் பிறைக் கோளங்கள் தென்படும். மொகலாயப் பெரு மன்னர்களின் மதிப்பிற்குரிய தொழுகையிடம் இதுவே. ஜும்மா மசூதிக்கு அடுத்தாற்போல் நம் கண்ணில் படுவன சப்தர் ஜங்கின் சமாதியும், புது டில்லியும் ஆகும். கடைசியாக நம் கண்ணில்படுவது தென்மேற்குப் பகுதியில் காணப்படும் பாறைக் கூட்டம் ஆகும். அப்பாறைக் கூட்டத்தின் நடுவில் சுல்தான் காரியின் அழகிய சமாதியைக் காணலாம். இவ்வரலாற்றுச் சின்னங்களையெல்லாம் இணைக்கும் பாதைகள், இருபுறங்களிலும் செழித்த பசுமரங்களைக் கொண்டு விளங்குகின்றன.

'மேலே கூறப்பட்ட இவ்வளவு காட்சிகளையும் குதுப்மினாரின் உச்சியிலிருந்து உளங்குளிரக் காணலாம். இத்தகைய அழகுக் காட்சிகளை உரோமாபுரியிலன்றி, உலகில் வேறெங்கும் காண முடியாது.



6