பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

அறத்தின் குரல்


உயிரிழந்து வீழ்கின்ற அவன் உடலிலிருந்து ஓர் ஒளிப்பிழம்பு புறப்பட்டு நேரே கண்ணபிரானின் திருவடிகளைச் சென்றடைந்தது. ‘ஆகா இது என்ன ஆச்சரியம்? இந்த மாதிரிக் கொடிய மனிதனின் சரீரத்திலிருந்து ஓர் ஒளி புறப்பட்டு இவரைச் சரணடைகின்றதே? இதற்கு என்ன அர்த்தம்?’ -என்று திகைத்து மலைப்புற்றனர் கூடியிருந்தவர் யாவரும். கூடியிருந்தவர்களின் இந்தத் திகைப்பைப் போக்கி உண்மையை விளக்கவியாசமுனிவர் முன் வந்தார். ‘சிசுபாலன் யார்?’ -என்பதை விவரிக்கலானார் அவர்.

“முன் ஒரு காலத்தில் முன் கோபத்தில் வல்லவரான துருவாச முனிவர் திருமாலைக் காண்பதற்காகச் சென்றார். திருமாலின் இருப்பிடமான வைகுந்தத்தில் வாயில் காத்துக் கொண்டிருந்த காவலர்கள் இருவரும் அவருடைய பெருமையை அறியாமல் அவரை உள்ளே விடுவதற்கு மறுத்துவிட்டனர். துருவாசர் அவர்கள் மேல் மிக்க சினங்கொண்டார். எனக்கு இழைத்த இந்த அவமானத்திற்குப் பதிலாக என் சாபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்தக் கணமே நீங்கள் இருவரும் இவ்வாழ்வைத் துறந்து பூவுலகம் சென்று மானிடராய்ப் பிறந்து துன்பங்களை அனுபவிப்பீர்களாக, அவ்வாறு அனுபவித்தால் தான் உங்களுக்குப் புத்தி வரும்...” என்று கோபம் மேலிட்டுக் கூறினார். அதே சமயத்தில் வாயிற் காவலர்களுடனே யாரோ இரைந்து பேசிக் கொண்டிருக்கும் குரலைக் கேட்ட திருமால் தற்செயலாக வெளியே வந்தார். அங்கே துருவாச முனிவர் சினத்தோடு நிற்பதைக் கண்டதும் விஷயத்தை அனுமானித்துக் கொண்டார். முனிவரை அன்போடு இனிய சொற்களைக் கூறி வரவேற்றார். அவருடைய கோபம் மெல்லத் தணிந்தது.

“முனிவர் பெருமானே! அறியாமையினால் தவறு செய்து விட்ட இந்தக் காவலர்களுக்குத் தாங்கள் கொடுத்த சாபம் நீங்குவது எப்போது?...“ திருமால் கேட்டார்.

“எல்லாம் வல்ல இறைவனாகிய உனக்குப் பக்தர்களாக ஏழு பிறவி பிறந்து முடித்ததும் இவர்கள் மீண்டும்